ப்ளாஷ்பேக்... தமிழகம் அதிர 1982-ல் கருணாநிதி நடத்திய திருச்செந்தூர் வைரவேல் நடைபயண யாத்திரை
சென்னை: தமிழகத்தில் இன்று பாஜக தலைவர் எல். முருகன் நடத்தும் வேல் யாத்திரை பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முன்னர் 1982-ல் தமிழக அரசியலில் புயலை கிளப்பிய வைரவேல் நடைபயண யாத்திரையை திமுக தலைவர் மறைந்த கருணாநிதி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தமிழக பாஜக தலைவர் முருகன், 1 மாத கால வேல் யாத்திரையாக அறுபடை வீடுகளுக்கும் செல்வதாக அறிவித்தார். இன்று திருத்தணியில் இருந்து இந்த பயணம் தொடங்கும் என அறிவித்தார். இந்த பயணத்தை தொடங்கும் போது போலீசாரால் முருகன் கைது செய்யப்பட்டார்.
இதே தமிழகத்தில் 1982-ல் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி நடத்திய திருச்செந்தூர் நோக்கிய வைரவேல் நடைபயணம் மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் அந்த வைரவேல் பல்வேறு மர்ம முடிச்சுகளுக்கு விடைதேடி நீதி கேட்டு நடத்தப்பட்ட நெடும்பயணமாக வரலாற்று பக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது.
1980-ம் ஆண்டு நவம்பர் 26-ல் திருச்செந்தூர் முருகன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை அவரது அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். சுப்பிரமணியபிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றது அரசு. ஆனால் திருச்செந்தூர் கோவில் உண்டியலை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணியம் பிள்ளை வரும் முன்னரே சிலர் திறந்து அதில் இருந்த வைரவேலை திருடிவிட்டனர்; இதை தட்டிக்கேட்டதால் சுப்பிரமணிய பிள்ளை அடித்துக் கொல்லப்பட்டார் என்பது எதிர்க்கட்சிகள் புகாராக இருந்தது.

ஆர்.எம்.வீ- பால் கமிஷன்
இந்த சம்பவத்தில் அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரால் தமிழக அரசியலில் பெரும் பிரளயமே கிளம்பியது. இதனால் முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய கையோடு நீதிபதி சிஜேஆர் பால் தலைமையில் கமிஷன் அமைத்தார். தமிழக அரசியலில் பால் கமிஷன் அறிக்கை என்பது பிரசித்தி பெற்ற விவகாரம்.

பால் கமிஷன் அறிக்கை
நீதிபதி பால் விசாரணை நடத்தி 288 பக்க அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தார். இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, பால் கமிஷன் அறிக்கையின் நகல்களை வெளியிட்டார். அதில், சுப்பிரமணிய பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவே கூறப்பட்டிருந்ததால் பிரச்சனை மேலும் உக்கிரமானது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
வைரவேல் திருட்டை தட்டிக் கேட்ட சுப்பிரமணிய பிள்ளையை படுகொலை செய்த கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நீதிகேட்டு நெடும்பயணம் செல்வேன் என கருணாநிதி எச்சரித்தும் பார்த்தார். அப்போதைய எம்ஜிஆர் அரசு எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தது. அத்துடன் கருணாநிதிக்கு பால் கமிஷன் அறிக்கை கிடைக்க காரணமாக இருந்ததாக சில அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டனர்.

நீதி கேட்டு நெடும் பயணம்
இதனால் கருணாநிதி அறிவித்தபடி 1982 பிப்ரவரி 15-ல் மதுரையில் இருந்து 200 கி.மீ. தொலைவு திருச்செந்தூருக்கு நடந்தே சென்றார். 8 நாட்கள் இந்த நீதிகேட்டு நெடும்பயணம் நடைபெற்றது. 1982 பிப்ரவரி 22-ல் திருச்செந்தூரை கருணாநிதி சென்றடைந்தார். இந்த நடைபயணத்தால் கருணாநிதியின் கால்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

நலம் விசாரித்த எம்ஜிஆர்
இதனை கேள்விபட்ட முதல்வராக இருந்த எம்ஜிஆர், கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். தமது அரசுக்கு எதிரான நடைபயணத்தை கருணாநிதி நடத்தியபோதும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டபோது எம்ஜிஆரால் அமைதிகாக்க முடியவில்லை. அதனால் எம்ஜிஆர் நலம் விசாரித்தார். கருணாநிதியின் இந்த நீதிகேட்டு நெடும்பயணம் எம்ஜிஆர் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

வரலாற்று முரண்கள்
ஆனால் அடுத்த ஆண்டு 1983-ல் நடைபெற்ற திருச்செந்தூர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு அமோக வெற்றி பெற்றது வரலாற்று விசித்திரம்தான்!












Click it and Unblock the Notifications