என்னது 35 ஆயிரமா? எலே ஒரு பைக்கே வாங்கிறலாம்லே! வியர்க்க வைக்கும் விமான கட்டணம்! கதிகலங்கும் பயணிகள்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்தவர்கள் மீண்டும் சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், பேருந்து மற்றும் விமான கட்டணங்கள் திடீரென பல மடங்கு உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக மதுரையிலிருந்து சென்னை திரும்ப விமான கட்டணம் சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவில் இருந்தது. ஆனால் தற்போது அது 32 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. வாக்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வேலை மற்றும் தொழில் காரணமாக சென்னையில் வசித்து வந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஊர்களுக்கு திரண்டதால், அப்போது பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது வாக்குப்பதிவு முடிந்ததால், மீண்டும் வேலை மற்றும் தொழிலுக்காக சென்னை திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தனியார் பேருந்துகள்
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். சாதாரண நாட்களில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சாதாரண இருக்கை கட்டணம் 600 முதல் 800 ரூபாய் வரை இருந்தது. ஆனால் தற்போது அதே இருக்கைக்கான கட்டணம் 1500 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட பயணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து கட்டணம் அதிகரிப்பு
மேலும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது. நெல்லையிலிருந்து சென்னை வரும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு 2500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் மதுரையிலிருந்து சென்னை செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கும் சுமார் 2400 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் சென்னை திரும்ப முயற்சிப்பதால் பேருந்துகளுக்கு அதிகமான தேவை உருவாகியுள்ளது.
விமான கட்டணம் உயர்வு
இந்த தேவையை பயன்படுத்திக் கொண்டு கட்டணத்தை அதிகரித்துள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். தேர்தல் காலங்களில் இதுபோன்ற கட்டண உயர்வு மீண்டும் மீண்டும் நடைபெறுவது குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பேருந்து கட்டண உயர்வை விட அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விமான கட்டண உயர்வு.
32 ஆயிரம் ரூபாய்
தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்துவிட்டு சென்னை திரும்ப முயற்சிக்கும் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் பல மடங்கு அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரணமாக மதுரையிலிருந்து சென்னை திரும்ப விமான கட்டணம் சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவில் இருந்தது. ஆனால் தற்போது அது 32 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் தூத்துக்குடியிலிருந்து சென்னை வருவதற்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகள் அதிர்ச்சி
திருச்சியிலிருந்து சென்னை வருவதற்கான கட்டணம் வழக்கமாக 4,500 ரூபாய் இருந்த நிலையில், தற்போது அது 14 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. கோவையிலிருந்து சென்னை வருவதற்கான கட்டணமும் 4,600 ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பேருந்து மற்றும் விமான கட்டணங்கள் ஒரே நேரத்தில் அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. குறிப்பாக வேலைக்காக கட்டாயமாக சென்னை திரும்ப வேண்டியவர்கள் இந்த உயர்ந்த கட்டணத்தை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications