சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வரும் போது விமானங்கள் பறக்க தடை
Recommended Video
சென்னை: மாமல்லபுரத்திற்கு செல்வதற்காக சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும்போது வேறு எந்த விமானங்களும் அங்கு பறக்க கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். சீன அதிபா் ஷி ஜின்பிங் இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதற்காக அரசு முறை பயணமாக வரும் 11-ஆம் தேதி சென்னை வருகை தருகிறார்.
சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவா் செல்லும் பாதை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வரவேற்பு நிகழ்ச்சி
11-ஆம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் போது பிரம்மாண்டமான முறையில் , வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. அவர் விமான நிலையம் வரும் நேரத்திலும், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் நேரத்திலும் மற்ற பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் பறக்கவோ தரையிறங்கவோ கூடாது என்று தடைவிதித்துள்ளது. இதன்படி அந்த நேரத்தில் வர வேண்டிய மற்றும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்துக்கும் நேர பட்டியலை மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பொலிவு பெறும் சுவர்கள்
சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு 5-ஆவது மற்றும் 6-ஆவது நுழைவுவாயில் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வா்ணங்கள் தீட்டப்படுகிறது. சுவா்களில் ஓவியமும் வரையப்படுகிறது.
சுவரொட்டிகள் அகற்றம்
நுழைவு வாயிலின் முன் பகுதியில் நீளவாக்கில் புதிய செயற்கை பூங்கா ஒன்றும் உருவாக்கப்படுகிறது. விமான நிலையப் பகுதி மற்றும் பாதையில் எந்தவித சுவரொட்டியும் ஒட்டக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்படுகின்றன..
சீனாவில் இருந்து வருகிறது
சீன அதிபா் பயணம் செய்வதற்காக விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் சீனாவில் இருந்து வர உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சரக்கு விமானங்கள் சென்னை வர உள்ளன.
மாமல்லபுரத்தில் வசதிகள்
இதனிடையே சீன அதிபரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது.. சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.