டெக் ஊழியர்களாக பணியை துவங்கி மாஃபியாவாக மாறிய கூட்டம்!.. பிரம்மிக்க வைக்கும் 'கதை'!
ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் ராஜினாமா செய்தால் என்ன செய்வார்கள்? வேறு ஒரு வேலைக்கு செல்வார்கள் என்பது தான் பொதுவான பதில். ஆனால், பிளிப்கார்ட்டில் வேலை பார்த்த சிலர் வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பிளிப்கார்ட் இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் தளம், இந்நிறுவனத்தின் வெற்றி தான் இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் உருவாக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த நிறுவனத்தில் ஆரம்பம் முதல் பணியாற்றிய பலர் பணியை ராஜினாமா செய்துவிட்டு உடனே சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

அப்படி பிளிப்கார்ட்-ஐ விட்டு வெளியேறியவர்கள் சுமார் 150 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். இந்த குழுவுக்குத் இந்திய ஸ்டார்ட்அப் உலகம் வைத்திருக்கும் பெயர் - "பிளிப்கார்ட் மாஃபியா!".
வால்மார்ட் வாங்கிய பிறகு ஆரம்பமான புதிய கதை
வால்மார்ட், பிளிப்கார்ட்டை வாங்கியபோது, இந்நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் வைத்திருந்த பங்கை விற்று பெரிய தொகையை பெற்றனர். இது தான் ரிசைன் செய்து வெளியேறிய ஊழியர்களுக்கான முதலீடாக மாறியது.
பலர் நினைத்தது போல அவர்களின் கனவை நினைவாக்க புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினர். இப்படி கடந்த 15 வருடத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய நபர்கள் சுமார் 150 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவங்கியுள்ளனர். இதில் முக்கியமான 5 நிறுவனத்தையும், அதன் தலைவர்கள் பற்றியும் பார்ப்போம்!
போன்பே
சமீர் நிகம் மற்றும் ராகுல் சாரி ஆகியோர் பிளிப்கார்ட்டில் பொறியியல் மற்றும் மார்கெட்டிங் பிரிவுகளை வழிநடத்தியவர்கள். இவர்கள் உருவாக்கிய போன்பே இன்று இந்தியாவில் நடைபெறும் யூபிஐ பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதியை கையாள்கிறது. 65 கோடிக்கும் அதிகமான பயனாளர்களுடன் சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது.
முதலீட்டை எளிமையாக்கிய க்ரோ
"பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்?" என்ற கேள்வியிலிருந்து பிறந்ததுதான் க்ரோ.
பிளிப்கார்ட் தயாரிப்பு மற்றும் பொறியியல் பிரிவில் இருந்த நான்கு நண்பர்கள் இணைந்து உருவாக்கிய இந்த நிறுவனம், சாதாரண இந்தியர்களுக்கும் முதலீட்டை எளிமையாக்கியது. இன்று அதன் மதிப்பு 11 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
வியாபாரத்தை டிஜிட்டலாக்கிய உடான்
பிளிப்கார்ட்டின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அமோத் மாள்வியா மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய உடான், இந்திய மொத்த சந்தை வியாபாரத்தை இணைய உலகிற்கு கொண்டு வந்தது.
வெறும் 26 மாதங்களில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பை எட்டிய அதிவேக யூனிகார்ன் நிறுவனங்களில் ஒன்றாக இது மாறியது.
மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கிய சச்சின் பன்சால்
பிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் தனது பங்குகளை விற்ற பிறகு, மீண்டும் ஸ்கிராச்சில் இருந்து நவி (Navi) நிறுவனத்தை உருவாக்கினார்.
இன்று கடன், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளில் செயல்படும் நவி, இந்தியாவின் முக்கிய யூ.பி.ஐ செயலிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
கல்ட்.ஃபிட்
முகேஷ் பன்சால் மற்றும் அங்கித் நகோரி இணைந்து உருவாக்கிய கல்ட்.ஃபிட், உடற்பயிற்சியை கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை முறையாக மாற்றியது.
அதே அங்கித் நகோரி பின்னர் கியூர்ஃபுட்ஸ் நிறுவனத்தையும் தொடங்கி, இன்று 500-க்கும் மேற்பட்ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.
ஒரு நிறுவனம்... 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்!
பிளிப்கார்ட் வெறும் ஈ-காமர்ஸ் நிறுவனமாக மட்டும் வெற்றி பெறவில்லை. அது அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களை உருவாக்கிய ஒரு "பயிற்சி பள்ளி"யாக மாறியது.
பணம் செலுத்தும் சேவை, முதலீடு, கடன், உடல்நலம், உணவு விநியோகம் என பல முக்கிய துறைகளில் இன்று பிளிப்கார்ட் முன்னாள் ஊழியர்களின் தடம் பதிந்துள்ளது.
இதேப்போன்ற கதை அமெரிக்காவிலும் உள்ளது, இக்கதையின் பெயர் என்னவென்று தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.












Click it and Unblock the Notifications