முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு
தஞ்சை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் அருகே பிரச்சாரத்துக்கு சென்ற தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் சென்ற வாகனத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் அல்லது பரிசுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். பின்னர் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அந்த பணம் அல்லது பொருட்கள் மீண்டும் வழங்கப்படும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில், திருவாரூர் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை நகரில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக திருவாரூர் நோக்கி அவர் புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் போது, சாலியமங்கலம் நாலுரோடு பகுதியில் அவரது வாகனம் சென்றபோது, அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் சென்ற வாகனத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் வாகனத்தில் இருந்த பைகள் மற்றும் பிற பொருட்களை திறந்து சோதனை செய்தனர். இந்தச் சோதனை சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதாக கூறப்படுகிறது. வாகனத்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை முடித்த பின்னர், முதல்வரின் வாகனம் மீண்டும் திருவாரூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமலில் உள்ள சூழலில், முக்கிய அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்குக் கூட சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications