பிரியா மரணம்! 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தில் தாமாக முன் வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா. இவர் ராணி மேரி கல்லூரியில் படித்து வந்தார். இவர் கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் கல்லூரியிலும் தனது பயிற்சியை தொடர்ந்தார்.
அப்படி ஒரு நாள் பயிற்சியின் ஈடுபட்ட போது பிரியாவுக்கு மூட்டு ஜவ்வு கிழிந்துவிட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அவருக்கு அறுவைசிகிச்சை செய்த போது காலில் ரத்தம் வெளியேறியதால் அந்த இடத்தை இறுக்கமாக கட்டிவிட்டனர்.

அறுவை சிகிச்சை
பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்தும் வலிகுறையவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. அறுவை சிகிச்சைக்கு சென்ற போது நடந்தே சென்ற பிரியாவால் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அவரால் காலை அசைக்க கூட முடியவில்லை. அந்தளவுக்கு வீங்கிவிட்டது. இதையடுத்து பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு மருத்துவர்களே, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர்.

கட்டை பிரித்த போது
அங்கு கட்டை பிரித்து பார்த்த போது கால் தசைகள் அழுகியிருந்தன. ரத்தம் கட்டிப்பட்டுவிட்டது. இதனால் மேலும் பாதிப்படையாமல் இருக்க காலை நீக்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிரியாவின் கால் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென பிரியாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரியா உயிரிழந்தார்.

பெரியார் நகர்
இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் நகரில் பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பிரியா குறித்த முழு மருத்துவ அறிக்கை வெளியாகும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பிரியா மரணம்
இந்த நிலையில் பிரியா மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications