வீராங்கனை பிரியா மரணம்- மருத்துவர்கள் சிகிச்சையில் குறையும் இல்லையே-அமைச்சர் மா.சு. புது விளக்கம்
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்களை கைது செய்யக் கூடாது என்கிறது மருத்துவர்கள் சங்கம்.
மருத்துவர்கள், பிரியாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த பிரச்சனையும் குறையும் இல்லை. ஆனால் மருத்துவர்கள் கவன குறைவாக, அலட்சியமாக நடந்து கொண்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு. மருத்துவர்களும் கூட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்; குற்றவியல் நடவடிக்கைதான் கூடாது என்கின்றனர். அத்துடன் இதனை கொலை குற்றமாக கருதவும் கூடாது; துறை ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருகிறோம் என்கின்றனர் டாக்டர்கள்.

வல்லுநர்களுடன் ஆலோசனை
நாளை மறுநாள் அதாவது வரும் 23-ந் தேதியன்று 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில் அறுவை சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மெட்ராஸ் ஐ பாதிப்பு
மெட்ராஸ் ஐ குறித்து கூறுகையில், பருவநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள மெட்ராஸ் - ஐ எனும் கண் நோயானது டிசம்பர் 2 வது வாரத்தில் குறையத் தொடங்கிவிடும். தற்போது கண் நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பிரியா பின்னணி
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவரது மகள் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கால்பந்தாட்டத்தில் சாதிப்பதில் முனைப்புடன் இருந்தார் பிரியா. அவருக்கு கால்வலி ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றார். பிரியாவின் காலில் சவ்வு பிரச்சனை இருந்தது. இதனால் முதலில் சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

பிரியா மரணமும் சர்ச்சையும்
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு 2 மருத்துவர்கள் அறுவை சிக்ச்சை செய்தனர். அப்போது இறுக்கமான கட்டும் போட்டிருக்கின்றனர். இதனால் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனைக்கு பிரியா மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா மரணம் அடைந்தார். பிரியாவின் மரணம் பெரும் சர்ச்சையானது. இதனால் பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications