"இது வெறும் தொடக்கம் தான்.." அடுத்த 10 நாட்களுக்கு பொளக்க போகுது மழை.. வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி
சென்னை: சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுக்க பெரும்பாலான பகுதிகளில் இரவு முழுக்க நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதற்கிடையே இந்த மழை என்பது வெறும் தொடக்கம் தான் என்றும் அடுத்த 10 நாட்களில் இதுபோல இன்னும் அதிக மழை தமிழகத்திற்குக் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாகச் சென்னையில் மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது.
பிரதீப் ஜான்: இதனால் சென்னைவாசிகள் குஷியாகியுள்ளனர். இதற்கிடையே இந்த மழை என்பது வெறும் தொடக்கம் தான் என்றும் வரும் நாட்களிலும் இதுபோன்ற மழை தொடரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் சில ட்வீட்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வரை சிவப்பு தக்காளி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகத் தீவிரமான மழை மேகங்கள். இது ஒரு ஆரம்பம் தான் அடுத்த 10 நாட்களுக்கு இதுபோல இன்னும் அதிகமாகப் பார்க்கப் போகிறோம். இந்த மழை மேகங்கள் மெல்லக் கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதில் குறுகிய நேரத்தில் அதிக தீவிர மழை பெய்யும்.
இன்று தஞ்சாவூர், அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் தீவிர மழை மேகங்கள் உருவாகியுள்ளன.. தென் சென்னை புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஆக.5ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மழை இருக்கு: நாளை ஆக.6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக.8ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 9 மற்றும் 10ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications