சென்னை உட்பட மொத்தம் 13 மாவட்டங்கள்! அடுத்த சில மணி நேரத்திற்கு நல்ல மழை இருக்கு! வானிலை மையம் தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இப்போது தொடங்கி உள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்தது. அப்போது முதலே வடதமிழக மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்து வருகிறது.
இந்தாண்டு மழை வழக்கமாக இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ள நிலையில், மாநிலத்தில் பெய்யும் மழையால் மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

ஏமாற்றம்
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் கூட வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருந்தது. இதனால் மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறி இருந்தது. இருப்பினும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்ததால், கரையைக் கடப்பதற்குள் வலுவிழந்தது. இதனால் மாநிலத்தில் எந்த இடத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

மழை
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் வரும் நவ. 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு உள்ளது.

13 மாவட்டங்கள்
இதற்கிடையே 13 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, மேலூர், மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் பெரியளவில் மழை பெய்யவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் 30மிமீ மழையும், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 20 மிமீ மழையும் பெய்து உள்ளது. இப்போது கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் புதிதாக எதுவும் ஏற்படவில்லை என்பதால் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications