அல்வா.. சோன்பப்டி.. மைசூர் பாகு.. சென்னையிலிருந்து ஸ்வீட்களை பார்சல் கட்டிச் சென்ற செஸ் வீரர்கள்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து சென்னையிலிருந்து தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற வீரர்கள் கூடவே இந்திய இனிப்பு வகைகளையும் கிலோ கணக்கில் வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
Recommended Video
குறிப்பாக ஹல்வா, மைசூர் பாகு, சோன் பப்ளி உள்ளிட்ட இனிப்பு வகைகளின் சுவை ரொம்பவே பிடித்துப் போனதால் அவைகளை அதிகம் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
சென்னை பயணத்தை மறக்க முடியாத வகையில் செஸ் வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு பார்த்து பார்த்து செய்திருந்தது கவனிக்கத்தக்கது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் மு.க.அழகிரி மகன்! அண்ணன் தம்பி சந்திப்பு எப்போது? களைகட்டும் மதுரை!
செஸ் ஒலிம்பியாட்
சென்னையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து அதில் பங்கேற்ற வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற வண்ணம் இருக்கின்றனர். சிலர் சென்னையிலிருந்து நேரடி விமானம் மூலமும் சிலர் டெல்லி சென்று அங்கிருந்தும் சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
தமிழக அரசு
செஸ் வீரர்களை பாதுகாப்பாக அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. எப்படி விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்து வரப்பட்டார்களோ அதேபோல் நட்சத்திர விடுதியிலிருந்து மீண்டும் அவர்களை விமான நிலையம் அழைத்துச் சென்று விட்டு வழியனுப்பி வருகிறார்கள் தமிழக விளையாட்டுத்துறை அதிகாரிகள்.
இந்திய உணவுகள்
இதனிடையே கடந்த 10 நாட்களாக இந்திய உணவு வகைகளை குறிப்பாக தமிழகத்தின் இட்லி, தோசை, வடை போன்ற உணவு பண்டங்களை பெரும்பாலான நாட்டு வீரர்கள் விரும்பி சாப்பிட்டனர். குறிப்பாக அல்வா, மைசூர் பாகு, சோன் பப்ளி, காஜுகத்லி, லட்டு, உள்ளிட்ட இனிப்பு வகைகளின் சுவைகள் அவர்களை பெரிதும் கவர்ந்தன. இதனால் தாங்கள் ருசித்த அந்த சுவையை தங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும், ருசிக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான வீரர்கள் இங்கிருந்து ஸ்வீட்ஸ்களை வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
வத்தக் குழம்பு
இதேபோல் வத்த குழம்பின் சுவையையும் செஸ் வீரர்கள் பலரும் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்காகவே காரம் குறைவாக வத்தக் குழம்பு சமைக்கப்பட்டதாக நட்சத்திர விடுதி செஃப்கள் தெரிவித்திருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவை குறிப்பாக சென்னையில் தங்கியிருந்த நாட்களை மறக்கமாட்டார்கள் என்பது போல் ஒவ்வொரு நிகழ்வும் அமைந்திருந்தது.