மகாபலிபுரம் கடலில் குளித்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி.. மகன் கண் எதிரே நடந்த சோகம்
சென்னை: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி, மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் கண் எதிரே கடலில் இழுத்துச்செல்லப்பட்டு அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் என்று அழைக்கப்படும் மாமல்லபுரத்தில் கடற்கரை மற்றும் சிற்பங்கள் மற்றும் கோயில்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்தியாவின் புராதன சின்னங்களில் ஒன்று. சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் மகாபலிபுரம் வருவது வழக்கம். குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 4 மாதங்கள் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள். அந்த வகையில் தற்போது தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு வந்து சிற்பங்களை பார்த்து, கோயில்களை பார்த்து வியந்து ரசிப்பதுடன், கடலில் குளித்து மகிழ்கிறார்கள்.

அப்படித்தான் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்தனர். இங்கிலாந்தின் லண்டனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உடல் மசாஜ் தெரப்பிஸ்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பரிகெட் டைலர் (வயது 84) என்பவர் தனது மகன் ரூபர்ட்டைலர் (58) என்பவருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தாய், மகன் இருவரும் அறை எடுத்து தங்கி இருந்தார்கள்.
நேற்று மாமல்லபுரம் புராதன சிற்பங்களை சுற்றி பார்த்த இருவரும் பிறகு மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் பொழுதை கழித்தார்கள். அப்போது 2 பேரும் கடலில் குளித்தனர். 84 வயதான மூதாட்டி பிரிக்கெட் டைலர் கடல் பலத்த சீற்றமாக இருந்தபோது அச்சமே இல்லாமல், பலத்த அலைகளின் மத்தியில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது மூதாட்டி பிரிக்கெட் டைலர் திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார். அருகில் இருந்த அவரது மகன் ரூபர்ட்டெய்லர் தனது தாயை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் மூதாட்டியின் உடல் சில நொடிகளில் கடலில் உள்ளே இழுத்துசெல்லப்பட்டதால், தாயை அவரால் காப்பாற்ற முடியவில்லை.
பிறகு ஒரு மணி நேரம் கழித்து மூதாட்டி பிரிக்கெட் டைலர் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதாஸ்ரீ தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கிலாந்து நாட்டு பெண் சுற்றுலா பயணி கடலில் மூழ்கி இறந்தது பற்றி சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்த அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தூதரகத்தின் அனுமதியுடன் இங்கிலாந்து நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்ப போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications