சென்னை பள்ளிக்கரணை ஏரி பகுதியில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட வீடுகள்.. மக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், வி.பி.ஜி.அவென்யூ விரிவு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பகுதியாகும். இந்த பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டி 30 ஆண்டுகளாக சில குடும்பத்தினர் வசித்து வந்தனர். அப்படி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 47 வீடுகளை வனத்துறை இடித்து அகற்றி உள்ளது. அதேநேரம் அவர்களுக்கு மாற்று இடத்தையும் (பெரும்பாக்கத்தில் குடியிருப்பு) அரசு வழங்கி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணை ஏரி என்பது மிகப்பெரிய ஏரியாகும். இது சதுப்பு நில நன்னீர் ஏரியாகும். மிகவும் பொக்கிஷமான போற்றி பாதுகாக்க வேண்டிய உலகின் அபூர்வமான சதுப்பு நிலங்களில் ஒன்று. ஆனால் இந்த ஏரியில் பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இங்கு மோசமான பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் காலங்களில் பள்ளிக்கரணை பகுதியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனால் அங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி அரசு வெளியேற வலியுறுத்தி வருகிறது. ஆனா அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் ஆக்கிரமிப்பு வீடுகளில் உள்ள மக்கள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். தற்போது, காவல்துறை, மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களை அகற்ற முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன.

அந்த வகையில் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் முதற்கட்டமாக விதிமீறலுடன் கட்டப்பட்டுள்ள 170 வீடுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், வி.பி.ஜி.அவென்யூ விரிவு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 47 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார்கள். கடந்த வருடம் வனத்துறை சார்பில் இப்பகுதி பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்றும், எனவே இங்குள்ள வீடுகளை காலி செய்யும்படியும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் அப்பகுதி மக்கள், நாங்கள் 30 வருடங்களாக இங்கு வசிக்கிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். அரசு சார்பில் இப்பகுதிக்கு குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. எனவே நாங்கள் இங்கிருந்து காலி செய்ய மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இதையடுத்து வனத்துறை சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய்த்துறையினர், வனத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் 50-க்கும் மேற்பட்ட துரைப்பாக்கம் போலீசார் பாதுகாப்புடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பகுதியில் அகற்றப்படும் வீடுகளின் உரிமையாளர்கள் 47 பேருக்கும் பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க பொதுமக்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் லட்சுமி என்ற பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு எழுந்தது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். கைதான 7 பேரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 47 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் துரைப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக சென்னை மாவட்ட வனத்துறை அதிகாரி சரவணன் இந்த மாத தொடக்கத்தில் இதுபற்றி பேசும் போது, பள்ளிக்கரணை பகுதியில் 1,085 ஆக்கிரமிப்பு இடங்கள் இருப்பதாக பையோ மெட்ரிக் கணக்கெடுப்பு மூலமாக கண்டறிந்திருக்கிறோம். அதன்படி, முதற்கட்டமாக டாக்டர் அம்பேத்கர் நகரில் 102 வீடுகளும், மகாலட்சுமி நகரில் 70 வீடுகளும் ஆக்கிரமித்துள்ளதை அடையாளம் கண்டு இந்த குடியிருப்புவாசிகளுக்கு இம்மாதம் இறுதிக்குள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி இருக்கிறோம்.
இவர்களுக்கு செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு இடம்பெயர ஏற்பாடு செய்திருக்கிறோம். அதேபோல், அரசு நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டவை தவிர்த்து காமாட்சி நகர், காயிதே மில்லத் நகர், ம.பொ.சி நகர், கே.பி.கந்தன் நகர் போன்ற இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications