Anwar Raja: சைலன்ட்டாக அண்ணா அறிவாலயம் வந்து! ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா!
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா, இன்று முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இதனிடையே அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். திமுகவில் இணைந்ததுமே அதிமுக, பாஜக குறித்து அவர் கடுமையாக விமர்சித்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை, தொடர்ந்து விமர்சித்து வந்தவர் அன்வர் ராஜா. தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என அன்வர் ராஜா தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துகள் அதிமுக- பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அன்வர் ராஜா
திமுகவில் அன்வர் ராஜா இணையவுள்ளதாக திமுக ஆதரவு சேனல் ஒன்றில் பிளாஷ் வெளியானதுமே அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அண்ணா அறிவாலயம் சென் அன்வர் ராஜாவை, திமுகவின் சீனியர் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
திமுகவில் அன்வர்
அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அவர் எதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை பார்க்கலாம். பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானது அதிமுகவில் பலருக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்.
அமித்ஷா
இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சம் அரசு அமைக்கும். அதில் பாஜக கட்சியின் பங்கு இருக்கும் என தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின முதல்வர் வேட்பாளர் யார் என கேட்டதற்கு, தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம்.
முதல்வர் அதிமுகவில் இருந்து வருவார் என அமித்ஷா, கூறியிருந்தாரே தவிர எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என அவர் குறிப்பிடவில்லை. இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் 2ஆம் மட்ட தலைவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
மூத்த தலைவர்கள்
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பேட்டி அளித்தபோது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை. அது போல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா ஒரு நாளிதழுக்கு அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பாஜகவால் ஒரு போதும் காலூன்ற முடியாது, கூட்டணிக்கு தலைமை அதிமுகதான். தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்.
ஒருங்கிணைப்பு
இதை பாஜக ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழக மக்கள் எந்த காலத்திலும் அதை விரும்பியதில்லை.
தேஜ கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த பாஜகவின் திட்டம் பலிக்காது. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர், பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என தெரிவித்திருந்தார். அன்வர் ராஜா, பாஜகவுக்கு எதிராக பேசியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக- பாஜக கூட்டணி குறித்து தனது எதிர்ப்பு எடப்பாடி பழனிசாமி மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா, இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, தன்னை, திமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், எ.வ.வேலு, டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் இருந்தனர்.












Click it and Unblock the Notifications