முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நீண்டகால.. உதவியாளர் ராஜம்மாள் காலமானார்! ஓபிஎஸ்- ஈபிஎஸ் இரங்கல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நீண்ட காலம் உதவியாளராக பணியாற்றிய ராஜம்மாள் வயது முதிர்வு காரணமாகக் காலமானார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பல ஆண்டுகளாகச் சமையலராக பணியாற்றி வந்தவர் ராஜம்மாள்.
சுமார் 40 ஆண்டுகளாக ராஜம்மாள் ஜெயலலிதாவுக்குச் சமையலராக பணியாற்றியவர். கடந்த சில மாதங்களாகவே ராஜம்மாளுக்கு வயது மூப்பு காரணமாக சில உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

ராஜம்மாள் காலமானார்
இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், 75 வயதான ராஜம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாளின் மறைவுக்கு அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியாளராகவும், நம்பிக்கைக்குரிய தோழமையாகவும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் தோட்டம் வேதா நிலையத்திலேயே தங்கி பணிவிடைபுரிந்த பாசத்துக்குரியவர் ராஜம்மாள்.

தாயின் பரிவு
அவர் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம். ராஜம்மாள் ஒரு தாயின் பரிவுடனும், பாசத்துடனும் தன்னை நேசித்து, போற்றி, பாதுகாப்பதாகப் பலமுறை ஜெயலலிதா நெகிழ்ந்து கூறியிருப்பதைக் கட்சியினரும், ஜெயலலிதாவை அறிந்தவர்களும் நினைவில் கொண்டிருக்கிறோம்.

கனிவும், பணிவும்
கனிவும், பணிவும் கொண்ட ராஜம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாசத்துக்குரிய ராஜம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல சசிகலாவும் ராஜம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகலா
ராஜம்மாள் மறைவு தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "ராஜம்மாளின் மறைவு மிகவும் வேதனையையும், துயரத்தையும் எனக்கு அளித்துள்ளது. வேதா இல்லத்தில் எங்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்துள்ளார். ராஜம்மாள், ஜெயலலிதா மீதும் என் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ஜெயலலிதாவுக்கும் எனக்கும் எத்தனையோ சோதனை காலகட்டங்களில் உறுதுணையாக இருந்துள்ளார். ராஜம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications