சாதிக் கலவரத்தால் உதித்த ஐடியா.. கோழி முட்டைக்குக் கருணாநிதி புது விளக்கம்..ரீவைன்ட் ஸ்டோரி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் நூற்றாண்டை அரசு மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
அதன் அடையாளமாகச் சென்னை கிண்டியில் அவரது பெயரில் ரூ.376 கோடி செலவில் 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'யை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்த உற்சாகம் குறைவதற்குள்ளாகவே அவரது சொந்த ஊரான திருவாரூர் அருகே காட்டூரில் அவருக்காக 7,000 சதுர அடி பரப்பில், 12 கோடி ரூபாய் செலவில் 'கலைஞர் கோட்ட'த்தை கடந்த ஜூன் மாதம்தான் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இத்துடன் முடிந்துவிடவில்லை. அதிரடி தொடர்ந்தது. இதே வேகத்துடன் மதுரையில் 215 கோடி ரூபாய் செலவில் 'கலைஞர் நூற்றாண்டு நூலக'த்தை கடந்த ஜூலை மாதம் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதன் மூலம் மதுரை மக்களுக்கு ஆச்சரியம் அளித்த ஸ்டாலின், அந்த வேகம் குறைந்துவிடக் கூடாது என்று இப்போது மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட'த்தை தொடங்கி வைத்து தமிழக பெண்கள் அனைவரையும் இன்பக் கடலில் மூழ்க வைத்திருக்கிறார்.
இந்த நூற்றாண்டு வேளையில் மு.கருணாநிதியுடன் நெருங்கிப் பழகிய இருவரிடம் உங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா எனக் கேட்டோம்.

அதற்கு முதலில் முன்வந்தார் தவத்திரு பொன்னம்பல அடிகளார், "தென்மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் வெடித்த காலகட்டத்தில்தான் நான் முதன்முதலாக அவரை சிவகங்கையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தேன்.
அப்போது தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று அமைதி பணி ஆற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது விருப்பத்தை ஏற்று அமைதி பணி செய்யச் சென்றோம்.
அங்கே நடந்த அசம்பாவிதங்கள் பற்றி ஒரு அறிக்கையை அவரிடம் தந்தோம். வீடுகளுக்கு எரியாத மேற்கூரை தேவை என்று கூறியிருந்தோம். அதைக் கேட்டு, உடனடியாக பல கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் கூரைகள் கொண்ட வீடுகளைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக வழங்கினார்.
அப்போது நடந்த கலந்தாய்வில்தான் 'சமத்துவபுரம்' என்ற திட்டத்திற்கான 'கரு' உருவானது. கிராமங்களில் தெருக்கள் ஜாதிகளாக இருக்கிறது. அதை உணர்ந்த அவர், சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி வாழச் சமத்துவபுரம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்.
அதைப்போல் கோவை மாவட்ட குண்டு வெடிப்பின் போதும், அமைதிப் பணி செய்யச் சென்றோம். பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய அறிக்கையை அறிந்தவுடன் அதற்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்கினார்.
நமது தமிழ்மொழி, காயப்பட்டு, ஒதுக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்டுக் கிடந்த மொழி. அது செம்மொழி சிம்மாசனத்தில் இன்றைக்கு ஏறி அமைந்திருக்கிறது என்றால், அதற்குக் கலைஞர் கருணாநிதிதான் காரணம்.

தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்து கிடைத்த போது மதுரையில் ஒரு மாநாட்டை நடத்தினோம். அப்போது அதியமானுக்கு ஒளவை நெல்லிக்கனி வழங்கியதைப் போல நாங்கள், கலைஞர் கருணாநிதிக்குத் தங்கத்தில் நெல்லிக்கனி செய்து கொடுத்தோம்.
தன் வாழ்நாளில் அவரைப் போல் திருக்குறளுக்கு உயர்வு சேர்ந்தவர் வேறு யாரும் இல்லை. சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார். அதைத்தாண்டி குமரி முனையில் வான் உயர வள்ளுவருக்குச் சிலை அமைத்தார். அவரே திருக்குறளுக்கு உரையும் எழுதினார். அவரால் தமிழ் வாழ்ந்தது" என்றார்.
அடுத்து பேராசிரியர் அப்துல்காதர், "1965 அல்லது 1966இல் நான் மதுரை தியாகராசர் கல்லூரில் மாணவனாக இருந்து மொழிப்போரை நடத்திக் கொண்டிருந்த காலம். ஏறத்தாழ 60 கூட்டங்களை மாணவர்களாகிய நாங்கள் நடத்தினோம். அதில் முதல் கூட்டத்தின்போது கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டு பேசினார்.
அந்தக் கூட்டத்தில் தேர்தல் நிதிக்காகக் கோழி முட்டையை அவர் ஏலம் விட்டார். அதில் பெரும்பகுதி மாணவர்கள்தான் இருந்தனர். மாணவர்களைப் பார்த்து அவர், 'நீங்கள் படிக்கும்போது முட்டை வாங்கிவிடக் கூடாது. ஆனால், இந்த முட்டையை நீங்கள் வாங்கவேண்டும்.
இந்த முட்டையைச் சாதாரணமாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இந்த முட்டைக்கு அந்தணர்களைப் போல இரண்டு ஜென்மம். ஒன்று, பிறக்கும்போது. இரண்டு, அவர்கள் படிப்பதற்காகப் பள்ளிக்குச் செல்லும் போது. ஆக, அவர்கள் இரண்டு முறை பிறப்பதாக ஐதீகம்.

அதைப்போன்றே இந்த முட்டை தாயின் வயிற்றிலிருந்து ஒருமுறை வருகிறது. அதன்பிறகு அடைக்காத பின்னர்தான் முட்டையிலிருந்து குஞ்சு வருகிறது. எனவே இதற்கு இரண்டு ஜென்மம்.

இந்த முட்டைக்குள் பெட்டையும் இருக்கும். சேவலும் இருக்கும். அது கூவினால் சூரியன் உதிக்கும். உலகத்தில் எத்தனையோ பறவைகள் உள்ளன. ஆனாலும் கோழிதான் எனக்கு அதிகம் பிடிக்கும். அது பிறக்கும் போது பயன்படுகிறது. இறந்தாலும் பயன் தருகிறது. அது குப்பையில் பொறுக்கினாலும் ஊட்டச்சத்து உணவைத்தான் உனக்குத் தருகிறது.

அதனால், எந்தப் பொருளையும் தாழ்வாகப் பார்க்காதீர்கள். குப்பைக்கு அருகில் ஒரு கூட்டம் வாழ்கிறது என்பதால், அது தாழ்ந்து அல்ல' என்றார். அது எனக்கு இன்றைக்கும் நினைவைவிட்டு மறையாமல் அப்படியே மனதில் படிந்துகிடக்கிறது" என்றார்.
அதற்காகத்தான் அவர் ஆட்சிக்கு வந்ததும் குழந்தைகளுக்கு 'முட்டை' போட்டாரோ?












Click it and Unblock the Notifications