3 தடவை எம்எல்ஏ..2 வருஷ பதவியையும் விட்டுட்டேன்! எல்லாம் ‘இதுக்காக’ தான்.. பட்டென பேசிய விஜயதரணி..!
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் களமிறங்கவில்லை. இந்நிலையில் தான் கட்சி மாறியது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி தொடர்ந்து மூன்று முறை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி நிலையில் திடீரென அவர் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற போது தனக்கு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
விஜயதரணி: ஆனால் செல்வப்பெருந்தகை அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியையும் அவர் குறி வைத்து காய்களை நகர்த்தி வந்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி செல்வபெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேஎஸ் அழகிரி வசம் இருந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியும் செல்வப் பெருந்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தமிழக சட்டமன்ற குழு தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸில் ஏமாற்றம்: அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்த்தார் விஜயதாரணி. ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான கோபத்தில் இருந்த விஜயதாரணி குறித்து அறிந்து கொண்டனர் பாஜக தலைவர்கள். இதை அடுத்து அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைய வைத்துள்ளனர். இதற்காக பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த விஜயதாரணி ஒரு வழியாக பாஜகவில் இணைந்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அந்த சீட்டு வழங்கப்பட்டது. கட்சியின் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கன்னியாகுமரியில் தனி செல்வாக்கு இருக்கிறது. கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக பெருவெற்றி வெற்ற நிலையில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்றதற்கு காரணம் பொன் ராதாகிருஷ்ணன் என்ற தனிப்பட்ட நபரின் இமேஜ் தான் என தேசிய தலைமை நம்பியதால் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
அதிருப்தி: இந்நிலையில் தற்போதைய தேர்தலிலும் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். நாடாளுமன்ற எம்பி சீட்டு கிடைக்கும் என காத்திருந்த விஜயதாரணிக்கு அதிர்ச்சியே கிடைத்தது. அதை தொடர்ந்து விளவங்கோடு சட்டசபை தேர்தலும் நடைபெற இருப்பதால் எம்எல்ஏ செட் விஜயதாரணிக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனாலும் அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது அவருக்கு தேர்தல் நிறைவடைந்ததும் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
எக்ஸ் பதிவு: இந்நிலையில் தான் கட்சி மாறியது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள விஜயதரணி,"மோடி ஜி, நான் காங்கிரஸிலிருந்து பாஜகவில் சேர்ந்தேன், மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்து, இரண்டு வருட பதவிக்காலத்தை விட்டுவிட்டு கட்சியில் சேர்ந்தேன்.
என்ன காரணம்: காரணம், நமது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் நேர்மையான முயற்சிகளுக்காக மட்டுமே. உங்களின் வளர்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் நாட்டு மக்களுக்காக உங்களது தன்னலமற்ற முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்." என கூறியுள்ளார். இந்நிலையில் பாஜகவில் சேர்ந்து பல வாரங்கள் ஆகியும் விஜயதரணிக்கு பொறுப்புகளோ பதவியோ வழங்கப்படவில்லை. இதனால் தமிழக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அவர் தனது விரக்தியை இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.












Click it and Unblock the Notifications