காங்கிரசில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்... ஏழு தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பில்லை
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஏழு தமிழர் விடுதலையை எதிர்க்கத் தேவையில்லை என்றும் கூறினார்.
சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்ட சசிகாந்த். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமல்ல என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த யூபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 9ஆவது இடத்தையும் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.

கர்நாடக மாநிலத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியராகப் பதவி வகித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்ததற்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளைக் கடுமையாக விமர்சித்து வந்த அவர் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.
பணியிலிருந்து விலகியபோது, பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் ஜனநாயகம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டையும் முன்வைத்தார். தான் காங்கிரஸில் இணைய முடிவெடுத்துள்ளதாக கூறியிருந்த அவர், சிஏஏ போராட்டங்களில் கலந்து கொண்டபோது தான் நான் இருக்க வேண்டிய இடம் இதுவே என்பதை உணர்ந்தேன்.
நாடு இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள ஒரே வழி அனைவரையும் ஒன்றிணைப்பதுதான். நேசம் மிகுந்த இந்தியாவை விட்டுச் செல்வதற்கு ஒன்றாகக் கரம் கோர்க்க வேண்டியது காலத்தின் தேவை. நம் குழந்தைகளின் மனதில் வெறுப்பை வைப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த சசிகாந்த் செந்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது செய்தியாளர்கள் ஏழு தமிழர்கள் விடுதலைப்பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுபேரையும் பிரியங்கா, ராகுல்காந்தி ஆகிய ஏழு பேரும் மன்னித்து விட்ட நிலையில் அவர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
ஏழு பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கட்சியில் இணைந்த உடனேயே தலைவரின் கருத்துக்கு எதிராக கருத்து கூறியுள்ளார் சசிகாந்த் செந்தில்.












Click it and Unblock the Notifications