திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி!
சென்னை: தோத்துப் போனதுக்கு கைதட்டுங்க! அதனாலதான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம். திமுக நாசமா போனதுக்குக் காரணமே திமுககாரன் தான்! "ஒரிஜினல் திமுககாரனை வளர்த்து விடுங்க, அது போதும்!" - என கலைஞர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி மிக ஆவேசமாகப் பேசியுள்ளர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு 74 வது வார்டு சார்பில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பழங்காநத்தம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் தேர்தல் தோல்வி குறித்து தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி," நம்முடைய ஆட்சியில் நமது தலைவர் மக்களுக்காகப் பல திட்டங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அதைப்பற்றி இப்போது பேசி பிரயோஜனம் இல்லை;
அதைப்பற்றி நினைத்தும் பிரயோஜனம் இல்லை. மக்கள் நமக்கு ஒரு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார்கள்; அந்தப் பாடத்திற்கு உங்களுக்கு நன்றி..." என்றார். இதைக் கேட்டவுடன் மேடைக்குக் கீழே இருந்த திமுக தொண்டர்கள் கைதட்டினர். அதற்கு "ஆமா.. தோத்துப் போனதுக்கு கைதட்டுங்க! அதனாலதான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம். திமுக நாசமா போனதுக்குக் காரணமே திமுககாரன்தான்! சின்புள்ள சொல்லுச்சு, ஆத்தா சொல்லுச்சு, பாட்டி சொல்லுச்சுன்னு போயி..."
"மதுரை மேற்கு தொகுதியில் இந்த ஓராண்டு காலத்தில் பூங்காவாக இருக்கட்டும், மீனாட்சி அம்மன் கோவில் இடமாக இருக்கட்டும், மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையெல்லாம் சொன்னார்களோ, அதையெல்லாம் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், நல்லது செஞ்சு ஓட்டுப் போடுவதை விட, நீங்கள் ஒரு முடிவை தீர்மானித்து ஓட்டுப் போட்டுள்ளீர்கள். இனி திமுகவிற்கு அதைப்பற்றிப் பேசுவதற்கு வேலை கிடையாது. நாம் திமுகவிற்காக நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம். பேசிய பிரயோஜனமும் இல்லை, பேச வேண்டிய தேவையும் இல்லை. நாம் வந்து இனி கட்சிப் பணியை மட்டும் ஆற்ற வேண்டும். மக்களுக்கு எல்லாம் தெரியும், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்."
திமுக கட்சியை எவராலும் அழிக்க முடியாது என்றும், உண்மையான திமுகவை வளர்க்க வேண்டும். மக்களுக்காக முன்னோடித் திட்டங்களை எல்லாம் செய்தவர்தான் கலைஞர். அவருடைய பிறந்தநாளை திமுகவின் உணர்வுள்ள தொண்டர்கள் கொண்டாடி வருகிறோம். திமுக இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. திமுக குடும்பத்தில் உள்ள பேத்தி சொல்லுச்சு, பேரன் சொல்லுச்சு என்று ஓட்டுப் போட்டதால்தான் இந்த நிலைமை. இதைவிட பல்வேறு சோதனைகளைச் சந்தித்து இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்துள்ளார்கள். இப்போது இருக்கும் நம்ம தலைவரும் அதை பண்ணுவார்.
நிகழ்ச்சிக்கு திமுக உணர்வு உள்ளவர்கள் வந்திருக்கிறீர்கள். இனிமேல் வெத்தலை பாக்கு வைத்து யாரையும் அழைக்க வேண்டாம். ஒரிஜினல் திமுகவை வளருங்கள், அதுமட்டும் போதும். அதில் எத்தனை பேர் உண்மையாக இருக்கிறார்களோ, அதுதான் நமக்கு வலு, அதுதான் கம்பீரம்! அதை விட்டுவிட்டு மக்களுக்கு அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று சொல்ல வேண்டாம். மக்கள் தெரிந்துதான் ஓட்டுப் போட்டுள்ளார்கள்.
சரி ரைட்.. மாற்றுத் தரப்பினருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள், அதை அவர்கள் பயன்படுத்தட்டும். நாம் நம் இயக்கத்தைப் பார்ப்போம்!. மக்களுக்குச் செய்த நன்மைகளைச் சொல்லிப் புலம்புவதை நிறுத்திவிட்டு, கட்சியில் உள்ள உண்மையான தொண்டர்களை அடையாளம் கண்டு, ஒரிஜினல் திமுகவை வளர்க்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications