கொதிக்கும் கொங்கு! அதிமுகவிலிருந்து விலகும் செங்கோட்டையன்? 2026ல் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி!
சென்னை: மனம் திறந்து பேசுகிறேன் என அரசியல் கட்சி தலைவர் சொன்னாலே ஏதோ பெரிய வெடி காத்திருக்கிறது என்று அர்த்தம். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 5ஆம் தேதி மிக முக்கிய முடிவை எடுக்கலாம். சொல்ல போனால் அதிமுகவை விட்டே விலகும் முடிவை அறிவிக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த விவசாயிகள் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்திருந்தார்.

அந்த பேனர் விவசாயிகள் சங்கத்தால் வைக்கப்பட்டது என ஆயிரம் சமாதானங்கள் சொல்லப்பட்டாலும் செங்கோட்டையன், அதிமுக தலைமையுடன் ஒட்டாமலேயே இருந்தார்.
அதிமுகவில் இருந்து விலகல்?
இவர் எப்போது வேண்டுமானாலும் அதிமுகவிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மனக்கசப்புகளுடன் 6 மாதங்களுக்கு மேல் அவரும் அதிமுகவில் பயணித்துவிட்டார். இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி செங்கோட்டையன் மனம் திறந்து பேச போவதாக அறிவித்துள்ளார்.
கொங்கு மண்டலம்
இது அதிமுகவிலும் கொங்கு மண்டலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில், "பொதுவாக ஒரு அரசியல் கட்சித் தலைவர், மனம் திறந்து பேச போகிறேன் என்றால் ஏதோ பெரியதாக வெடிக்க போகிறார் என்று அர்த்தம்.
நிறைய தலைவர்கள்
1980களில் இது போல் நிறைய தலைவர்கள் மனம் விட்டு பேசியிருக்கிறார்கள். அப்போது உள்கட்சி பூசல் விவகாரங்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவு ஏன், செங்கோட்டையனும் அப்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மனம் விட்டு பேசினால் அதிரடிதான்
மனம் விட்டு பேச போகிறேன் என்றால் அதிமுகவில் இருக்க மனமில்லை, பூரண திருப்தி இல்லை என்றுதான் அர்த்தம். எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏ செங்கோட்டையன் என்பதால் அவர் அதிமுகவிலிருந்து விலகும் முடிவை எடுப்பதில் கடினமாக இருக்கும்.
இரண்டாக பிளவுப்பட்ட கொங்கு
கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன், தங்கமணி போன்றோர் அதிருப்தியில் இருப்பதால் இது சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும். இத்தனை மாதங்களாக செங்கோட்டையனை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
கட்சிதான் முக்கியம்
இதனால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றாலும் கட்சியை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே முக்கிய நோக்கமாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். செங்கோட்டையன் சொன்ன 5 ஆம் தேதிக்கு இன்னும் இரு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் அவரை எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்ய முயற்சி செய்வாரா இல்லை வேறு கட்சிக்கு போனாலும் போகட்டும் என விட்டுவிடுவாரா என தெரியவில்லை. எனவே 5ஆம் தேதி அதிரடி காத்திருக்கிறது.
வியூகம் வகுக்காத பழனிசாமி
பொதுவாக கட்சியின் தலைவர் என்பவர் பழையவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். புதியவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இருவரும் கட்சிக்கு முக்கியம்தான். இதற்கு எடப்பாடி பழனிசாமி எந்த வியூகமும் வகுக்கவில்லை.
வெளியே செல்லட்டும்
கொங்கு மண்டலம் தற்போது இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தின் தேர்தல் வெற்றி அதிமுக, பாஜகவுக்கு முக்கியமானது. அது போல் தென் மண்டலத்தில் ஓபிஎஸ், டிடிவி பிளவுப்பட்டு கிடப்பதாலும் அதிமுகவுக்கு பாதகம் ஏற்படலாம். மூத்த நிர்வாகிகளின் அதிருப்தியை வளரவிட்டு அவர் கட்சியை விட்டு வெளியே செல்லட்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இது அதிமுகவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இவ்வாறு தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications