ராமதாஸ் உடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. நேற்றுதானே அப்படி சொன்னாரு? பாமகவில் அடுத்த ஸ்டெப் என்ன?
சென்னை: சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அவரது பேரன் முகுந்தன் இன்று சந்தித்து பேசியுள்ளார். பாமகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த முகுந்தன், ராமதாஸை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்ததால் பாமகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு
இந்தச் சூழலில், பாஜகவின் மேலிடத்துடன் நெருக்கமாக உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் டாக்டர் ராமதாஸை அண்மையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமது பேரன் முகுந்தன் வீட்டில், ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் பாமகவில் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை அபிராமபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அவரது பேரன் முகுந்தன் சந்தித்து பேசியுள்ளார்.
ராமதாஸ் உடன் முகுந்தன் சந்திப்பு
சென்னை அபிராமபுரத்தில் உள்ள மகள் கவிதா இல்லத்தில் தங்கியிருக்கும் ராமதாஸை அவரது பேரன் முகுந்தன் சந்தித்துப் பேசினார். பாமகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த பிறகு தற்போதுதான் முகுந்தன், ராமதாஸை முதன்முறையாக சந்தித்து பேசி உள்ளார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது முகுந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள்" என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அண்மையில் அறிவித்தார். மருத்துவர் அய்யா தான் என்றென்றும் எனது குலதெய்வம். அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றும் முகுந்தன் தெரிவித்திருந்தார்.
யார் இந்த முகுந்தன்?
முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன் ஆவார். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்தார். அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக, முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். முகுந்தன் இன்று முதல் பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக செயல்படுவார்" என்றார்.
பாமகவில் வெடித்த மோதல்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, "அவன் 4 மாதம் முன்புதான் வந்தான். அவனுக்கு என்ன அனுபவம் உள்ளது? அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? நல்ல அனுபவசாலியாக போடுங்கள்" என்றார். அதற்கு பதில் சொன்ன ராமதாஸ், "நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும். கேட்கலைன்னா, யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இதுநான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்காவிட்டால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது" என்றார். அப்போது வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications