விருதுநகரில் திருமணம், மணப்பெண் சென்னையில்! இ பாஸ் நிராகரிப்பால் தவிக்கும் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர்
சென்னை: மகள் திருமணத்திற்கு செல்ல தந்தைக்கு இ பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். இவ்வளவு ஏன், அந்த மணப்பெண்ணே போக முடியாத நிலைதான் உள்ளது. இத்தனைக்கும் இ பாஸ் கிடைக்காமல் தவிப்பவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், ஜூன் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களுக்கு சென்னை மக்கள் செல்வதை தடுக்க இ பாஸ் வழங்கும் நடைமுறை கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளது.
திருமணம், மருத்துவ தேவை, இறப்பு போன்ற விவகாரங்களுக்காக மட்டும் இ-பாஸ் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
காதலனுடன் ஓடிய மகள்.. ராத்திரியோடு ராத்திரியாக கொன்று.. தீவைத்து எரித்து .. ஒரு தாயின் கொடூர செயல்!
ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்
இந்த நிலையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தனது மகள் திருமணத்திற்கே போக முடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. சென்னை, கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஏ. சந்திரசேகரன். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஜூன் மாதம் ஓய்வுபெற்றார்.
24ம் தேதி திருமணம்
பணியில் இருக்கும்போதே தன் மகள் கல்யாணத்தை நடத்திட முயற்சி செய்தார். அதற்கான தருணம் இப்போது தான் வந்தது. மகள் காயத்திரி- முத்துமணி திருமணம் விருதுநகர் மாவட்டம், ஆவுடையார் புரத்தில் உள்ள வ.உ.சி. மனமகிழ்மன்றத்தில் வருகிற 24. 6. 2020 அன்று நடைபெறுகிறது.
மணப்பெண்ணுக்கே பாஸ் இல்லை
அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சந்திரசேகரன் செய்து முடித்தார். தன் மனைவி, மகள் (மணமகள் காயத்திரி) உட்பட 7 பேருடன் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்வதற்கு இ பாஸ் கேட்டு விண்ணப்பித்தார். திருமணத்திற்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
கமிஷனரிடம் முறையீடு
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய குடும்பமே மன உளைச்சலில் உள்ளது. இதையடுத்து தங்களுக்கு உதவும்படி காவல் ஆணையாளர் ஏகே விஸ்வநாதனிடம் சந்திரசேகரன் குடும்பம் முறையீடு செய்துள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசின் கெடுபிடியால், போலி இ பாஸ் மூலம், வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
போலி பாஸ்கள்
சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர், திருச்செந்தூர் சென்றபோது, விருதுநகர் அருகே அவரை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது மணிவண்ணன் வைத்திருந்தது போலி இ-பாஸ் என்று தெரியவந்துள்ளது. சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள, சூலூர் ஜெராக்ஸ் என்ற கடையில் போலி இ-பாஸ் பெற்றது தெரியவந்ததையடுத்து அந்த கடையை தாசில்தார் சீல் வைத்துள்ளார்.