திடீர் உடல் நலக் குறைவு.. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 66,575 வாக்குகள் வித்தியாத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வந்தார்.
இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications