யூடியூபரை தாக்கிய தவெகவினர்.. விஜயை விமர்சித்ததால் சென்னையில் ‛அட்டாக்'.. 4 பேர் கைது
சென்னை: நடிகர் விஜய் மற்றும் தவெகவினரை விமர்சனம் செய்ததாக கூறி யூடியூபரை தவெகவினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக யூடியூபர் கொடுத்த புகாரின் பேரில் தவெக ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‛ப்ரண்ட்ஸ்'. இந்த திரைப்படம் 2001ல் வெளியாகி இருந்தது. தற்போத இந்த திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள தியேட்ட்ரில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. ஏராளமான விஜய் ரசிகர்கள், தவெகவினர் திரைப்படத்தை பார்த்தனர். அப்போது தியேட்டரின் அருகே முகலிவாக்கத்தை சேர்ந்த யூடியூபர் கிரண் புரூஸ் (38) பேட்டி எடுத்தார்.
இந்த வேளையில் யூடியூபர் கிரண் புரூசுக்கும், 4 பேருக்கும் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த 4 பேர் கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. அதுமட்டுமின்றி அவரை தியேட்டரில் இருந்து வெளியே தள்ளிய கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது. இந்த பிரச்சனையில் கிரண் புரூஸ் காயமைடைந்தார்.
இதுபற்றி அவர் வடபழனி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தியேட்டருக்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவரை 4 பேர் தாக்கியது தெரியவந்தது. மேலும் அவர்கள் 4 பேரும் தியேட்டருக்குள்ளேயே இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான பாலகிருஷ்ணன் (28), தனுஷ் (32), அசோக் (30) மற்றும் பார்த்தசாரதி என்பது தெரியவந்தது. யூடியூபரை பொது இடத்தில் தாக்கியது தொடர்பாக 4 தவெகவினர் மீதும் கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் தற்போது விஜயின் தவெக ஆதரவாளர்களாக உள்ளனர். மேலும் யூடியூபர் கிரண் புரூஸ் தவெக மற்றும் விஜயை பற்றி விமர்சனம் செய்ததாகவும், இதனால் கோபமாகி அவர்கள் 4 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதும் தெரியவந்துள்ளது. கைதான 4 பேரும் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications