செந்தில் பாலாஜி தரப்பில் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்.. குற்றச்சாட்டு நாளை பதிவு செய்யப்படுமா?
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கைது செய்தது. இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி புதிதாக 2 மனுக்களை தாக்கல் செய்தார். அதில், 'சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. எனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆவணங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலே இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்கிறது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டது. இந்த வழக்கில் கடந்த 18 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் 22 ஆம் தேதி (நாளை) நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது".
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரியுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் இந்த புதிய மனுவால் நாளை குற்றச்சாட்டு பதிவு செய்வது தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை நாளை நேரில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், செந்தில் பாலாஜி தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஐசியூ வார்டில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், செந்தில் பாலாஜி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications