ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை மோசடி.. புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்க உள்ளது. இதற்கிடையே தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் பரபரப்பான புகார் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை தொகுதியை சேர்ந்த எல்எஸ் பிரபு ராஜா வழங்கி உள்ளார். புகார் வழங்கிய பிறகு எல்எஸ் பிரபு ராஜா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என்னுடைய பெயர் எல்எஸ் பிரபு ராஜா. நான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை தொகுதியை சேர்ந்தவன். நான் திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். விஜய் கட்சி தொடங்கும்போது நான் உடனடியாக கட்சியில் இணைத்து கொண்டேன். ஏனென்றால் விஜய்யின் ரசிகர் நான்.
புஸ்ஸி ஆனந்த் உடன் சந்திப்பு
அதன்பிறகு இப்போது மதுரவாயல் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக நிற்கும் ரேவந்த் சரண் மூலமாக புஸ்ஸி ஆனந்தை சந்தித்தேன். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்னிடம், 'நீங்கள் அறந்தாங்கி தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக நில்லுங்கள் தம்பி. பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும்' என்று கூறினார்
அதற்கு நான் என்னால் முடிந்தவரை செலவு செய்கிறேன் என்றேன். மக்களுக்கு 2 ஆண்டுகளாக நலத்திட்ட பணிகளை செய்தேன். அந்த தொகுதியில் நான் போன பிறகு தான் தமிழக வெற்றிக் கழகம் எழுச்சி பெற்றது. விஜய் கட்சி தொடங்கியிருந்தாலும் நான் தான் அறந்தாங்கி தொகுதியில் எழுச்சி பெற வைத்தேன்.
வேட்பாளர் பட்டியலில் பெயர்
ஒரு வருடத்துக்கு முன்பாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்துவிட்டார். அவருக்கு யார் யார்? சாதகமாக இருப்பார்களோ அவர்களை எல்லாம் வேட்பாளராக நியமனம் செய்தார். அதில் நானும் ஒருவர். ஒரு வருடத்துக்கு முன்பு 234 தொகுதிகளுக்கும் நியமனம் செய்த வேட்பாளர்களை அப்படியே அறிவித்து இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.
விருப்பமனு என்ற பெயரில் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை விருப்பமனு கொடுத்துள்ளனர். இதில் ஒருவரிடம் கூட நேர்க்காணல் நடத்தவில்லை. அப்புறம் எதற்காக ஊழலை ஒழிப்பேன். திமுக ஒரு தீயசக்தி என்று கூறி வருகின்றனர்? நாங்கள் எல்லாம் மாற்று அரசியல் வேண்டி தான் வந்தோம்.
ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை
விருப்பமனுவில் ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை மோசடி செய்துள்ளனர். விருப்பமனு பெற்றவர்கள் யாரையும் அழைத்து தலைவர் (விஜய்) நேர்க்காணல் செய்யவில்லை. பொதுச்செயலாளர் (புஸ்ஸி ஆனந்த்) அதனை செய்ய விரும்பவில்லை. 10 ஆயிரம் ரூபாய் டிடி எடுத்து சொல்லி அதனை வைத்து தான் தி.நகர் தொகுதியில் செலவு செய்கிறாரோ? என்ற சந்தேகம் உள்ளது. நிறைய பேரிடம் வசூல் செய்துள்ளார்.
என்னுடைய தொகுதியில் பணம் கொடுக்கமாட்டேன் என்று கூறியதால் புதுக்கோட்டையை சேர்ந்த நபரை அறந்தாங்கி வேட்பாளராக களமிறக்கி உள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரியை பார்த்து புகார் தெரிவித்துள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
அறந்தாங்கி வேட்பாளர் மீது குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தவெக வேட்பாளராக முகமது பர்வேஸ் போட்டியிடுகிறார். இவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். 32 வயது ஆகிறது. மிகப்பெரிய அடாவடி நபர். பருவத்தில் பழுத்ததுடா என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோன்ற நபர். மதரீதியாக செயல்படுபவர். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் நம்மிடம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாவட்டத்தில் மிரட்டல் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது'' என்று குற்றம்சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications