அப்டேட்டா ஏமாத்துறாங்கலாம்..புதுவகையில் அரங்கேறும் போதை பொருள் மோசடி..இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!
சென்னை : ஏடிஎம் கார்டு மோசடி, கிப்ட் மோசடி, பென்சில் மோசடி வரிசையில் தற்போது, விமான போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல போன் செய்து பணத்தை திருடும் மோசடி கும்பலின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் சைபர் மோசடி குறித்து 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.
இன்றைய காலத்தில் அனைவருமே சர்வ சாதாரணமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால், இதுதொடர்பான ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடி இருக்கின்றன.

ஆன்லைனில் வேலை தருவதாக கூறி பலரிடம் இருந்து பணத்தை மோசடிக் கும்பல் கொள்ளையடிக்கின்றனர். இந்த மோசடிகளால் ஒரு பக்கம் பணம் இழப்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் நமக்கு ஏற்படும் மனக்கஷ்டத்தை அவ்வுளவு எளிதில் வெளியே சொல்ல முடியாது.
மோசடிகள் அதிகம்: யூடுயூபில் லைக் செய்தால் பணம், கூரியர் டெலிவரி செய்தால் பணம், வெளிநாட்டில் இருந்து கிஃப்ட் வந்துள்ளது எனக் கூறி மோசடி என இப்போது புதுவகை மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார். கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. விமான நிலையங்களில் போதை பொருட்களை கடத்தி பிடிபடுபவர்கள் குறித்த தகவல்கள் அடிக்கடி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
புதுவகை மோசடி: இதுபோன்ற செய்திகளை பார்ப்பவர்களை குறிவைத்து புதுவகை மோசடி ஒன்று அரங்கேறி இருக்கிறதாக எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார். அந்த வகையில் ட்ரூ காலரில் 'போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இந்திய அரசு' என சேவ் செய்யப்பட்ட எண்களில் இருந்து மக்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் தங்கள் பெயருக்கு வெளிநாட்டிலிருந்து பார்சல் வந்துள்ளது. அதை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது அதில் போதைப் பொருட்கள் இருக்கிறது எனவே நீங்கள் உடனடியாக மும்பை வரவேண்டும் இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு உடனே போலீஸ் வரும் எனச் சொல்லி இணைப்பை துண்டித்து விடுவார்கள்.
போதை பொருள் பார்சல்: பிறகு வேறு ஒரு எண்ணில் இருந்து அழைக்கும் அந்த மோசடி கும்பல் தாங்கள் சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து பேசுகிறோம். மும்பையில் உங்களுக்கு பார்சல் வந்துள்ளதாக அதிகாரிகள் எங்களுக்கு தெரிவித்துள்ளனர். நாங்கள் உங்கள் ஊர் போலீசை உங்கள் வீட்டுக்கு வரவைப்போம் என மிரட்டுவார்கள். இதை அடுத்து சிறிது நேரத்தில் மற்றொரு எண்ணில் இருந்து தொடர்பு கொள்ளும் அந்த கும்பல் நாங்கள் உங்கள் ஊரிலிருந்து பேசுகிறோம் இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வருவோம் என மிரட்டுவார்கள்.
பணம் கேட்டு மிரட்டல்: இப்படியாக உங்களை பதட்டமடைய செய்யும் அந்த மோசடி கும்பல் சிறிது நேரத்தில் வழக்கறிஞர் எனவும் அல்லது உள்ளூர் காவல்துறை என பேசும் அதிகாரி தற்போதைக்கு இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு உடனே பணம் அனுப்ப வேண்டும் என சொல்லுவார்கள். முதலில் சிறிய தொகையை சொல்லும் அவர்கள், அதற்கு பிறகு ஒருவேளை நீங்கள் அனுப்பிவிட்டால் ஆடு சிக்கிவிட்டது என நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு உங்களை தொந்தரவு செய்வார்கள்.
போலீசார் எச்சரிக்கை: மேலும் வழக்கறிஞர் போலீஸ் அதிகாரி எனக் கூறி தொடர்ந்து மிரட்டல் அழைப்புகளும் வரும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடி அழைப்புகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். மேலும் இது போன்ற மிரட்டல்கள் மின்னஞ்சல்கள் தொலைபேசி அழைப்புகள் தங்களுக்கு வந்தால் இது குறித்து உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் எண்ணுக்கு அனுப்ப தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் எக்காரணம் கொண்டும் பணம் செலுத்த வேண்டாம் பயப்படவும் வேண்டாம் என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications