இலவசமாக காலை உணவு, சொந்த வீடு.. தூய்மை பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தூய்மை பணியாளர் நலத்திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு தூய்மை பணியாளர்கள் மீது தனி கரிசனம் உள்ளது எனவும், இலவசமாக காலை உணவு, சொந்த வீடு உள்பட 6 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட அனுமதி அளித்து இருந்ததாலும், அனுமதி இன்றி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை கைது செய்து காவல்துறையின் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்காக 6 புதிய திட்டங்களை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இலவசமாக காலை உணவு, சொந்த வீடு உள்பட 6 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது:-
* தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.
* பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
* தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
* தூய்மை பணியாளர்கள் காலையிலேயே பணிக்கு செல்ல இருப்பதனால் அவர்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications