குரூப் 4 வேலைதான் கனவா? தமிழக அரசே கொடுக்கும் இலவச பயிற்சி.. சரியான சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் குரூப் தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே தேர்வுக்காக பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் விதமாக, குரூப் 4 தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வரும் 2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், இதற்கான பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு ஸ்மார்ட் போர்டு வசதியுடன் நடத்தப்படுவதாகவும் நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் அரசு வேலை கனவுடன் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி வெளியிடும் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருகிறார்கள்.

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு பணி நிலைகளில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகின்றன. இதில் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வுக்குத்தான் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள்.
வி ஏ ஓ, இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் என்றாலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள். நடப்பு ஆண்டில் சுமார் 8 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன.
தற்போது சான்றிதழ் பதிவேற்றம் போன்ற அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை அடுத்த ஆண்டும் நடைபெற இருக்கும் தேர்வு விவரங்களை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. ஆண்டு கால அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மாதம் நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள்.
தேர்வர்கள் பலரும் கோச்சிங்க் சென்டர்களிலும் சென்று படித்து வரும் நிலையில், ஏழை எளிய தேர்வர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பிலும் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட வாரியாக மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் மூலமாகவும் சில நேரங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நெல்லையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 2-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது:- குரூப் 4 தேர்வு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வரும் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு ஸ்மார்ட் போர்டு வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரம்தோறும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களுக்கும் அலுவலக நூலகத்தில் உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள், பாளையங்கோட்டை பெருமாள்புரம் சி காலனி, சிதம்பரம் நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் 2 ஆம் தேதி நேரில் வர வேண்டும். காலை 10.30 மணிக்கு வர வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு தேர்வர்கள் 04622 - 902248 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications