அரசு லேப்டாப்பில் முதல்வர் ஸ்டிக்கரை அகற்றி ரீல்ஸ்! எல்காட்டின் ஒரே வார்னிங்.. வாலை சுருட்டி அமைதி!
சென்னை: தமிழக அரசு சார்பாக கொடுக்கப்பட்ட லேப்டாப்பின் மேல் இருக்கும் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களை அழித்தால் தமிழக அரசின் வாரண்டி சலுகையை பெற முடியாது என்ற எல்காட் நிறுவனத்தின் விளக்கம் வெளியானதையடுத்து, அப்படியான செயல்களில் ஈடுபட்டவர்கள் வாலை சுருட்டி கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு பின் லேப்டாப்பில் கருணாநிதி, ஸ்டாலின் படங்களை அழித்து வெளியிடப்படும் ரீல்ஸ்கள் முற்றிலும் குறைந்துள்ளது.
ஜனவரி 5ஆம் தேதி உலகம் உங்கள் கையில் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச லேப்டாப்களை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் தங்கள் தொகுதிகளில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிகளை விரைவாக நடத்தி வருகின்றனர்.

இந்த லேப்டாப்பின் மேல் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசின் இலச்சினையும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழக அரசு கொடுத்த லேப்டாப்பில் இந்த அடையாளங்களை விரும்பாத தவெக, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள், லேப்டாப்பில் அச்சிடப்பட்ட கருணாநிதி, ஸ்டாலின், தமிழக அரசின் இலச்சினையை தின்னர் கொண்டு அழித்தனர்.
இன்னும் சில தவெக ஆதரவாளர்கள், அந்த லேப்டாப் மீது தவெக கொடியுடன் விஜய் இருக்கும் புகைப்படங்களை ஒட்டினர். அதேபோல் சிலர் சீமான், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களையும் ஒட்டி அதனை ரீல்ஸாக எடுத்து சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்ய தொடங்கினர். இதனை வைத்து ஸ்டாலினின் லேப்டாப், இப்போது விஜய், எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமானின் லேப்டாப்பாக மாறிவிட்டதாக சோசியல் மீடியாவில் பேசி வந்தனர்.
ஆனால் திமுகவினர் மத்தியில், இது மாணவர்களுக்கு திறனை வளர்க்க கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதில் அளிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட லேப்டாப்பிற்கு வாரண்டி எதுவும் கொடுக்கப்படவில்லை. தற்போது தமிழக அரசு கொடுத்துள்ள லேப்டாப்பிற்கு ஓராண்டு வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் எல்காட் நிறுவனம் தரப்பில், லேப்டாப் மீதுள்ள புகைப்படங்களை நீக்கினால் வாரண்டி பெற முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஏனென்றால் லேப்டாப் மீது உள்ள சீரியல் எண் இருந்தால் மட்டுமே சர்வீஸ் செய்து கொடுக்க முடியும். இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும், அரசு வழங்கும் வாரண்டியை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் தவெக, நாதக நிர்வாகிகளால் லேப்டாப் டிரெண்ட் செயல்பாடுகள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களை அழித்துவிட்டு, அங்கு விஜய்யின் புகைப்படம் ஒட்டும் ரீல்ஸ்களை தவெகவினர் குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால் எல்காட் நிறுவனத்தின் ஒரேயொரு அறிவிப்பால், லேப்டாப் டிரெண்ட் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வாலை சுருட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications