மகளுக்காக ஜிவி பிரகாஷ் செய்யும் செயல்.. சந்தோஷத்தில் பேசிய சைந்தவி.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் பற்றி பின்னணி பாடகியான சைந்தவி வெளிப்படையாக பேசி இருக்கிறார். குறிப்பாக, விவாகரத்துக்குப் பிறகும் தங்களது மகளை இணைந்து வளர்த்துவரும் விதம் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது.

சைந்தவியின் பேட்டி
சமீபத்தில் சைந்தவி ஒரு பேட்டியில் பேசும்போது, தன்னுடைய மகள் அன்வியை எப்படி இருவரும் சேர்ந்து வளர்த்துவருகிறோம் என்பதை பகிர்ந்துள்ளார். அதில், "என் மகள் என் வீட்டிலும் இருப்பாள். அவங்க அப்பா வீட்டிலும் இருப்பாள். அவள் என் வீட்டிலிருந்து அங்கே செல்வதற்கு முன்னதாகவே ஃபோன் செய்து, இங்கே என்ன செய்தாள் என்பதை அவரிடம் சொல்லிவிடுவேன்.
அதேமாதிரி அங்கே ஏதாவது வால் தனம் செய்தால் அவர் உடனே எனக்கு ஃபோன் செய்து இப்படி செய்தாள், நான் திட்டினேன் என சொல்லிவிடுவார். பிறகு என் பொண்ணு வீட்டுக்கு வந்ததும் 'அப்பா வீட்டில் ஏன் அப்படி செய்தாய்' என்று கேட்டால், அவள் உடனே 'உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று ஆச்சரியமாக கேட்பாள்.
நாங்கள் பேசிக்கொண்டுதான் இருப்போம். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை என்றால் பிரச்னை வரும். அந்த சூழ்நிலையை மகளுக்கு கொடுக்கக்கூடாது என்பதில் நானும் அவரும் தெளிவாக இருக்கிறோம்."என்று சைந்தவி கூறி இருக்கிறார்.
பிரிவுக்கு பிறகும் புரிதல்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பள்ளிக் காலத்திலிருந்தே காதலித்து, குடும்ப சம்மதத்துடன் 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பரஸ்பர புரிதலுடன் பிரிவை அறிவித்து, விவாகரத்தையும் பெற்றுக்கொண்டனர். இருப்பினும், மகளின் நலனுக்காக, இருவரும் நல்ல நண்பர்களாகவே தொடர்ந்தும் பேசிக்கொண்டு, இணைந்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி. பிரகாஷ் பயணம்
ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானவர். "வெயில்" திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது பயணம், தொடர்ந்து பல ஹிட் படங்களால் உயர்ந்தது.
"பொல்லாதவன்", "மதராசபட்டினம்", "ஆயிரத்தில் ஒருவன்", "மயக்கம் என்ன", "தெய்வ திருமகள்" போன்ற படங்களில் அவரது இசை பெரிய வரவேற்பைப் பெற்றது. பின்னர் நடிகராகவும் மாறி பல படங்களில் நடித்தார்.
இசையை மீண்டும் கவனத்தில் எடுத்த அவர், "சூரரைப் போற்று", "வாத்தி" போன்ற படங்களுக்கு இசையமைத்து தேசிய விருதுகளையும் பெற்றது அவரது திறமையை மீண்டும் நிரூபித்தது.
சைந்தவி குரலின் மந்திரம்
சைந்தவியும் தமிழ் சினிமாவில் பல மென்மையான மெலடி பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த பின்னணி பாடகி தான். பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடியுள்ள அவர், தனது தனித்துவமான குரலால் தனி இடத்தை பிடித்துள்ளார்.
ரசிகர்களின் பாராட்டு
சைந்தவியின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், "பிரிந்தாலும் பெற்றோராக இணைந்து இருப்பது மிகப்பெரிய விஷயம்", "மகளுக்காக ஆரோக்கியமான உறவை காப்பாற்றும் இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது" என்று சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications