4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இளையராஜா இசைக் கச்சேரி! எங்கு எத்தனை மணிக்கு நடக்கிறது?
சென்னை: இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் கிடைக்கும் வகையில் இலவச பயணத்தை இன்று கொடுக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது போல் இந்த கச்சேரி எங்கு, எத்தனை மணிக்கு தொடங்குகிறது என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், நாளை 14.07.2024 "இளையராஜாவின் - இன்னிசை கச்சேரி" நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

இசை ஆர்வலர்களுக்கான சிறப்புச் சலுகையாக, கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு (Paytm Insider மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்) பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் (unique QR code) கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும், இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப் பயணத்திற்குப் பயன்படுத்தலாம் (2 நுழைவு & 2 வெளியேறு).
மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மெட்ரோ பாஸ்களை ஸ்கேன் செய்யலாம். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அழைக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த வகையில் இன்று மாலை 6.30 மணிக்கு நந்தனம் ஒய்சிஎம்ஏ மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் எஸ்பிபி சரண், மதுபாலகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பாடுகிறார்கள்.
இளையராஜாவின் எவர்கிரீன் பாடல்கள் இதில் இடம்பெற்றிருக்கும். மெர்குரி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி சென்னை மட்டுமல்லாமல், லண்டன், பாரிஸ், சூரிச் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் ஆகஸ்ட் 30ஆம் தேதியும் பாரீஸில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் சூரிச்சில் செப்டம்பர் 8ஆம் தேதியும் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications