தமிழக தேர்தல் வரலாற்றில் நிகழ்ந்த அதிர்ச்சி தோல்விகள்.. ஜாம்பவான்களை வீழ்த்திய மக்கள் தீர்ப்பு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் நடந்த அதிர்ச்சிகரமான தோல்விகளை பார்க்கலாம்.
தமிழக அரசியல் வரலாறு மிகவும் சுவாரஸ்யமிக்கது. ஏனென்றால் வாக்காளர்கள் எந்தத் தலைவரையும் நிரந்தரமாக அரியணையில் அமர்த்தியதில்லை. ஒரு சாமானிய வேட்பாளரைக் கூட வெற்றியாளராக மாற்றி, பெரும் தலைவர்களைக் கீழே இறக்கிய வரலாறு தமிழக வாக்காளர்களுக்கு மட்டுமே உண்டு.

1962ல் தேர்தல்
அத்தகைய அரசியல் சுனாமிகளை ஏற்படுத்திய நிகழ்வுகளில் முதன்மையானது 1962ல் அறிஞர் அண்ணாவின் தோல்வி. 1967ல் திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. திமுக தலைவராக இருந்த அறிஞர் அண்ணா, 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான எஸ்.வி.நடேச முதலியாரிடம் அறிஞர் அண்ணா தோல்வி அடைந்தார். ஆனாலும் 1957 சட்டசபைத் தேர்தலை காட்டிலும், 1962 சட்டசபைத் தேர்தலில் திமுக அதிக சீட்களில் வெற்றியை பெற்றது. ஆனாலும் அறிஞர் அண்ணாவின் தோல்வி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் இதுவே திமுக தொண்டர்களுக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் மக்கள் ஆதரவை முழுமையாகத் திரட்ட ஒரு ஊக்க சக்தியாக அமைந்தது.
காமராசர் அடைந்த தோல்வி
தொடர்ந்து 1967ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான அதிர்வு ஏற்பட்டது என்றே சொல்லலாம். நாடு முழுவதும் கிங் மேக்கர் என்று போற்றப்பட்ட காமராசரை விருதுநகர் தொகுதியில் ஒரு சாதாரண மாணவர் தலைவரான சீனுவாசன் வீழ்த்தினார். இந்த தோல்வி இந்தியா முழுவதும் பேசுபொருளானது.
காமராசரின் தோல்வி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. 1967க்கு பின் இதுநாள் வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. 1991ல் எதிர்க்கட்சியாக வர வாய்ப்பு கிடைத்த போதும், அதனை காங்கிரஸ் கட்சி அதிமுக உடன் கூட்டணி அமைத்து பின்னடைவை உருவாக்கி கொண்டது.
ஜெயலலிதாவின் தோல்வி
தொடர்ந்து 1991ல் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்த அதிமுக 1996ல் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மீது எழுந்த ஊழல் புகார்கள் மற்றும் அதிகார மையத்தின் மீதான மக்களின் அதிருப்தி அந்தத் தேர்தலில் எதிரொலித்தது. இதனால் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, திமுக வேட்பாளர் ஈ.ஜி. சுகவனத்திடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் ஆளும் கட்சியின் அத்தனை அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர்.
விஜயகாந்த் அடைந்த தோல்வி
தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்தவர் விஜயகாந்த். ஆனால் 2016ல் தேமுதிக நிறுவனர் விஜய்காந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வி அடைந்தார். 2016 சட்டசபைத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடட்ட விஜயகாந்த், அதிமுக வேட்பாளர் குமரகுருவிடம் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் தான் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார்.
அன்புமணியின் மறக்க முடியாத தோல்வி
அதேபோல் 2019 லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சீனியரான தம்பிதுரை காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியிடம் 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதே தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கமல்ஹாசன் அடைந்த தோல்வி
இந்த தோல்விக்கு பின் அன்புமணி தேர்தல் அரசியலுக்கே வரவில்லை. ராஜ்ய சபா உறுப்பினராகவே தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார். 2021 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அது சரி தலைப்பில் ஜாம்பவான்கள் என போட்டுவிட்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுவிட்டு அடுத்த தேர்தலில் கூட போட்டியிடாத கமல்ஹாசனை ஏன் சேர்த்திருக்கிறீர்கள் என்று கேட்பீர்கள்தானே. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோற்றதால் இந்த லிஸ்டில் இருக்கிறார். தப்பாக நினைக்க வேண்டாம்.












Click it and Unblock the Notifications