Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?
சென்னை: மாநில சட்டமன்றத்திலும் மக்களவை தேர்தலிலும் பல முன்னணி தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். அதில் சிலர் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதே தேர்தல் சரித்திரம் சொல்லும் உண்மையாக உள்ளது.
விஜய் இரண்டு தொகுதிகளில் களம் கண்டுள்ளது இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவரைக் குறைந்து மதிப்பிடுவோர், இம்முடிவைத் தோல்வி பயம் எனக் குறிப்பிட்டு விமர்சிக்கின்றனர். பொதுவாக அரசியல் கணக்குகள் அறிந்தோர் சரியான முடிவு என்றே சொல்கின்றனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 33(7)இன் படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை அனுமதிக்கிறது. அவர் இரண்டுக்கும் கூடுதலான இடங்களில்தான் போட்டியிடக் கூடாது. அது சட்டத்திற்குப் புறம்பானது.

ஒருவர் இரண்டு தொகுதியில் ஒருவேளை வெற்றி பெற்றால், அவர் 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தாகவேண்டும். செய்ய மறுத்தால் பதவி பறிபோய்விடும். தமிழக தேர்தல் வரலாற்றில் புகழ் பெற்ற அரசியல் தலைவரான மு.கருணாநிதி மட்டுமே இதில் விதிவிலக்கு. அவர் எப்போதும் ஒரு தொகுதியில் மட்டுமே நின்றுள்ளார். இறுதிவரை ஒரு முறைகூட அவர் தோல்வியைச் சந்தித்ததே இல்லை.
இரு மாநிலங்களில் நின்றவர்கள்
எம்ஜிஆர் 1977இல் பெரும் புகழ்பெற்றிருந்தார். ஆயினும் அவர் அருப்புக்கோட்டை மற்றும் மணலூர் என இரண்டிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின் மணலூர் தொகுதி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். 1980இலும் மதுரை மேற்கு, ஆண்டிபட்டி என நின்றார். ஆண்டிபட்டியைத் திரும்பப் பெற்றார். 1991இல் ஜெயலலிதா பர்கூர், காங்கேயம் ஆகிய இரண்டிலும் நின்றார். அரசியல் களத்தில் உச்சத்திலிருந்த வேளை இது. 2001இல் சட்டத்தை மீறி 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டப் பிரச்சனையால் அவர் மனுக்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.
2001இல் டாக்டர் கிருஷ்ணசாமி பூட்டுச் சாவி சின்னத்தில் ஒட்டபிடாரம் மற்றும் வால்பாறையில் களம் கண்டார். இந்தப் புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
விஜய் இப்போதுதான் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். அவரது தவெக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவே. இந்திய அளவில் பழுத்த அரசியல் தலைவர்கள் கூட இரண்டு தொகுதிகளில் களம் கண்ட வரலாறு உண்டு. பொதுவாகப் பிரதமர் போன்ற பெரும் பதவிக்குப் போட்டியிட்டவர்கள்கூட இரு தொகுதிகளில் நின்றுள்ளனர்.
முதன்முதலாகப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மோடி 2014இல் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமல்ல; குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் நிறுத்தப்பட்டார்.
1980இல் இந்திராகாந்தி, மேடக் (ஆந்திரா), ரேபரேலி (உபி) ஆகிய இரண்டிலும் நின்றார். 1999இல் சோனியா காந்தி, அமேதி (உபி), பெல்லாரி (கர்நாடகா) ஆகியவற்றில் களம் கண்டார். பாட்டி, அம்மா வழியில் 2019இல் ராகுல் காந்தி, தன் பரம்பரை ஆதிக்கம் அதிகமுள்ள அமேதி, வயநாடு (கேரளம்) என இரண்டிலும் நின்றார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991இல் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக்கத்துடன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். அப்போது லக்னோ (உபி), விஷிஷா (மத்தியப் பிரதேசம்) என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். முலாயம் சிங் யாதவ் 2014 மக்களவைத் தேர்தலில் ஆசம்கர், மைன்புரி (உபி) களம் கண்டார்.
பல மாநிலத் தலைவர்கள்
1991இல் சரத்பவார் புனே, பாராமதி என இரண்டில் நின்றார். அரவிந்த் கெஜ்ரிவால் 2014 மக்களவையில் புது டெல்லி, வாரணாசியில் நின்றார். 1991இல் அத்வானி காந்தி நகர், புது டெல்லி ஆகிய இரண்டில் களம் கண்டார். பின் டெல்லி தொகுதியை ராஜினாமா செய்தார். அங்கே நடந்த இடைத்தேர்தலில் ராஜேஷ் கண்ணா வென்றார்.
பிற மாநில முதல்வர்கள் கூட இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். 2017இல் பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் லம்பி, பாட்டியாலா ஆகியவற்றில் நின்றார். 2018 சித்தராமையா, கர்நாடகாவில் சாமுண்டேஸ்வரி, பதாமி என இரண்டில் நின்றார். ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பின் 2023இல் கே.சந்திரசேகர் ராவ், கஜ்வெல், காமரெட்டி என இரு தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்து களம் கண்டார்.
அண்டை மாநிலமான புதுவையில் 2021இல் தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய தொகுதிகளில் நின்றார். மகாராஷ்டிராவில் மாயாவதி 1996இல் ஹரோரா, பில்சி என இரண்டில் களம்புகுந்தார். இரண்டிலும் வென்றார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகிய இருவரும் இரண்டு தொகுதிகளில் களம் கண்டதில்லை. ஆனால், கே.சந்திரசேகர ராவ் பல முறை இரு தொகுதிகளில் நின்றுள்ளார். 2004இல் கரீம் நகர், சித்திப்பேட்டையில் நின்றுள்ளார். தனி மாநிலமான பின் 2014இல் கஜ்வல், மேடக் ஆகிய இரண்டிலும் நின்று வென்றார். 2023இல் கஜ்வெல், காமரெட்டியில் நின்றார். காமரெட்டியில் தோல்வியைத் தழுவினார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியோ புகிவெந்துலா தொகுதியில் முகமாகவே இருந்தார். அது கடப்பா மாவட்டத்தில் உள்ளது.
எழுதியது: கடற்கரய்












Click it and Unblock the Notifications