தமிழகத்தில் இன்று முதல்... அத்தியாவசிய பயணங்களுக்கும் இ பதிவு கட்டாயம்... விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணங்களுக்கு இன்று முதல் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இணை நோய் இல்லாத 84 பேர் உட்பட 311 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் மே 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே இடையிலான பயணங்களுக்கு இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யும் பொதுமக்கள் இ பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தைக் கொண்டு தடையின்றி, பொதுமக்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை கொண்டு https://eregister.tnega.org என்ற தளத்தில் இ பதிவு செய்ய வேண்டும்.
முன்னதாக, தமிழக அரசு அறிவித்த இ-பதிவு என்பது இ-பாஸ் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால், மாநில அரசு இது குறித்து விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.