100 சதவீதம் நுரையீரல்கள் பாதிப்பு.. 62 நாட்கள் எக்மோ கருவி.. 109 நாளுக்கு பிறகு மீண்ட கொரோனா நோயாளி
சென்னை: கொரோனா பாதித்து நுரையீரல்கள் முற்றிலும் பழுதடைந்த நிலையில் 109 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட 56 வயது முதியவர் தற்போது பூரண குணமடைந்து மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாம் அலை மிகவும் உக்கிரமாக இருந்தது. இரண்டாவது அலையின் போது படுக்கை கிடைக்காமலும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பலர் தங்கள் இன்னுயிரை விட நேர்ந்தது.
மிகவும் உக்கிரமாக இருந்ததால் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 4 லட்சம், 5 லட்சத்தை கடந்து சென்றது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சீரிய சிகிச்சை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் 2ஆவது அலை குறைந்தது.

மரணம்
இதில் பிழைத்துவிடுவார்கள் என நினைத்தவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவங்களும் பிழைக்கவே மாட்டார் என மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள் உயிர் பிழைத்த அதிசய சம்பவங்களும் நடந்துள்ளன. ஆம், சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் இரு நுரையீரல்களும் பாதிக்கப்பட்ட நிலையில் 109 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவரது உடல்நிலை தேறியுள்ளது.

ஏப்ரல் மாதம்
சென்னையைச் சேர்ந்தவர் முகமது முத்திஜா (56). இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்த நிலையில் அவரது நுரையீரல்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது தெரியவந்தது. குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உடல்நலம்
தற்போது அவர் நலம் பெற்றுவிட்டார். அவரது உடல்நலம் பூரண குணமடைந்தது. ஆபத்தான கட்டத்திலிருந்து அவர் மீண்டுவிட்டார். இதுகுறித்து முகமது கூறுகையில் இது எனது மறுபிறவி. மருத்துவர்கள் சொன்னதையெல்லாம் நான் செய்தேன். கடவுளின் துணையுடன் எனது உடல்நிலையை ஆரோக்கியமாக்க நிறைய முயற்சிகளை செய்தேன். பல நேரங்களில் நான் சுயநினைவு இல்லாமலேயே இருப்பேன்.

தொழிலதிபர்
எனது மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நான் விளையாட்டு வீரர். இதுதான் என்னை நிலைக்குலையச் செய்யாமல் திடமாக வைத்திருந்தது. தொழிலதிபரான நான் எனது பணியை மீண்டும் துவங்கவுள்ளேன். எனது குடும்பத்தினர், உறவினர்களை நான் பார்த்து கொள்வேன் என்றார் உற்சாகமாக!

மன தைரியம்
இன்னுமும் சக்கர நாற்காலியில் வலம் வரும் முகமது, மன உறுதி, மன தைரியத்தின் மூலம் கடினங்களை முறியடித்தார். இவரது மகள் மார்சுகா கூறுகையில் தனது தந்தைக்காக வீட்டில் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை ஏற்படுத்தியுள்ளேன். எக்மோ கருவிக்காக மாதம் ரூ 40 லட்சம் செலவானது. 62 நாட்கள் எக்மோ கருவியில் இருந்தார். இத்தகைய பணத்தை எல்லாராலும் செலவு செய்ய முடியாது. எங்கள் தந்தைக்கு செலவிட எங்களிடம் பணம் இருந்தது செலவு செய்தோம் என்றார்.

முகமது மனைவி
இதுகுறித்து முகமதுவின் மனைவியும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான அருண்மொழி பாத்திமா கூறுகையில், எனக்கு பல நேரங்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பமான சூழல் ஏற்பட்டது. ஆனால் எனது கணவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது எனது கணவரின் குணாதிசயங்களை மாற்றும் என தெரிவித்திருந்தார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
109 நாட்களாக மருத்துவமனையில் இருந்த முகமது தற்போது உடல்நிலையில் முன்னேறிவிட்டதற்கு காரணம் மருந்து மாத்திரைகள், கடவுள் அருள்.... இவை எல்லாவற்றையும் தாண்டி அவரது மன தைரியம் ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு இவர் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

மறுபிறவி எடுத்த முத்திஜா
தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை தொடக்க கட்டத்தில் உள்ளதால் இனி வரும் காலங்களில் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்திக்கும் நோயாளிகள் இவரது மன தைரியத்தை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பால் எமனுடைய வாசல் வரை சென்றுவிட்டு கம்பீரமாக உயிர்த்தெழுந்த முகமது முத்திஜா எடுத்தது நிஜமாகவே மறுபிறவிதான். அதே நேரத்தில் மக்கள் கொரோனா தடுப்பூசிகளை நிச்சயம் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த 3ஆவது அலை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் நிச்சயம் தாக்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications