தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் நிதி கிடைக்குமே.. குறுக்கிட்ட நீதிபதி.. சட்டென தமிழக அரசு தந்த பதில்
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகளில் 25% இடஒதுக்கீடுக்கான கல்வி கட்டணத்தை தர வேண்டும் என்று தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கியமான வாதத்தை பதிவு செய்துள்ளது. அதன் படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என மிரட்டி அடிப்பணிய வைக்க முடியாது என தமிழக அரசு கூறியுள்ளது. இன்று உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து தொகையை வழங்க வேண்டும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால். மத்திய அரசு வழங்க வேண்டிய 60 சதவீதம் நிதியை வழங்க மறுத்துவிட்டது. அதேநேரம் தமிழக அரசும் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் நிதியை விடுவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2024-2025 ம் ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயித்த கட்டணத்தையும், 2025-2026 ம் கல்வி ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட, உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் செலுத்த அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் தண்டபாணி முன்பு விசாரணை வந்தது, அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் படி உரிய தொகை வழங்கப்படவில்லை என்று வாதிட்டார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன் வாதிடுகையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 60 சதவீத நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்றும் 40 சதவீத தொகையை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நிலையில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொண்டால் மட்டுமே மத்திய அரசின் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவிப்பதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழகத்திற்கு நிதி கொடுப்பார்களே என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு தமிழக அரசு ஒருபோதும் அடிபணியாது என்றார். மேலும் இதுகுறித்து உரிய அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். இதையடுத்து நீதிபதி தண்டபாணி இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications