காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!
சென்னை: பாமக (ராமதாஸ்) எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகனும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்க்குமரன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டதால் அந்த தொகுதியில் தமிழ்க்குமரன் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருப்பவர் தமிழ்க்குமரனின் தந்தை ஜி.கே.மணி ஆவார்.
பாமக ராமதாஸ் அணியின் இளைஞரணி தலைவராக இருந்து வரும் தமிழ்க்குமரன் தற்போது காங்கிரஸில் இணைந்துவிட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜிகேஎம் தமிழ்க்குமரன் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்', 'இந்தியன் 2', 'வேட்டையன்' போன்ற பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு வெளியான 'என்றென்றும் புன்னகை' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாமக-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான 'மக்கள் தொலைக்காட்சி' குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார்.
2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவாக வென்ற திமுகவின் பெரியண்ணன் காலமானார். இதனால் இந்தத் தொகுதிக்கு 2010 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பாமக சார்பில் ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், 'நலம் காக்கும் அணி' சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 788 வாக்குகள் பெற்று, தனது எதிரணியைச் சேர்ந்த தேனாண்டாள் முரளியை (241 வாக்குகள்) தோற்கடித்தார். இது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரு வேட்பாளர் பெற்ற மிக அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் , அன்புமணி வகித்து வந்த பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு தமிழ்க் குமரன் நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட 3 மாதத்தில், அதாவது டிசம்பர் மாதத்தில், அந்த பதவியில் இருந்து விலகினார் தமிழ்க்குமரன்.
இதுகுறித்து ராமதாஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணி தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு பாமக நிறுவனர் ராமதாஸின் பேரனும் மகள் காந்திமதியின் மகனுமான முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். இதற்கு அந்த மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து மைக்கை தூக்கி அடித்தார். இந்த சம்பவத்தின் போது முதல் அப்பா- மகனுக்கு இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து தன்னால் தாத்தாவுக்கும் மாமாவுக்கும் சண்டை ஏற்படக் கூடாது என்பதற்காக முகுந்தனும் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து பாமக தலைவர் பதவியை அன்புமணியிடம் இருந்து பறித்த ராமதாஸ், அவரை செயல்தலைவராக நியமித்தார். ஆனால் இந்த பதவியை ஏற்க அன்புமணி மறுத்தார். இதையடுத்து அன்புமணிக்கு காலக்கெடு கொடுக்கப்பட்டு அவர் அந்த பதவியில் ஏற்காத நிலையில் தனது மகள் காந்திமதியை செயல்தலைவராக நியமித்தார். அப்போது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜி.கே.மணி மகன் தமிழ்க் குமரனை பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்கு நியமித்தார்.
இவ்வாறு நியமித்து 4 மாதங்கள்தான் ஆனது ஆனால் அதற்குள், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்க்குமரன் தாவிவிட்டார். ஏற்கெனவே ஒரு முறை ராமதாஸிடம் இருந்து 3 மாதங்களிலேயே விலகிய நிலையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்ட தமிழ்க்குமரன் 2ஆவது முறையாக ராமதாஸை ஏமாற்றிவிட்டு காங்கிரஸில் இணைந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications