அப்பல்லோவில் ஜி.கே.மணிக்கு ஆபரேஷன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து ஆறுதல்.. ஏன் என்னாச்சு?
சென்னை: பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக தலைவராக இருந்தவர் ஜி.கே.மணி. அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக தொண்டர்கள் விரும்பிய நிலையில் ஜி.கே.மணியும் அவ்வாறே விரும்பி தனது பதவியிலிருந்து விலகினார். எனினும் ஜி.கே.மணியின் அனுபவம் கட்சிக்கு தேவை என்பதால் அவருக்கு கவுரவத் தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஜி.கே.மணிக்கு கடந்த சில தினங்களாக தொண்டை வலி, தலைச்சுற்றல், தலை வலி இருந்து வந்துள்ளது.
இதனால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட போது அவருடைய தொண்டை குரல் வளையில் இருக்கும் கட்டியை உடனே அகற்றவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றைய தினம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது தொண்டையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு முன்பாக அப்பல்லோவுக்கு சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அது போல் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். ராமதாஸ் வன்னியர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பிலிருந்தே அவருடன் படைத்தளபதியாக ஜி.கே. மணி இருந்து வருகிறார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஜி.கே. மணி ஆசிரியராக இருந்தவர். 1998 ஆம் ஆண்டு முதல் பாமகவுக்கு தலைவராக ஜி.கே.மணி இருந்து வந்தார். சுமார் 25 ஆண்டுகளாக 12 முறை பாமக தலைவர் தேர்தலில் வென்றார் ஜி.கே.மணி. தொண்டர்களின் நாடித்துடிப்பை அறிந்து கொண்டு பணியாற்றுவதில் வல்லவர்.












Click it and Unblock the Notifications