பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணிக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பாமகவின் கெளரவத் தலைவரும், அக்கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாமக தலைவர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் இருந்தே மோதல் தொடங்கிவிட்டது. தனது பேரன் முகுந்தனை பாமகவின் இளைஞரணி தலைவராக அறிவித்தார் ராமதாஸ். இந்த அறிவிப்பிற்கு அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தந்தை மகனுக்கிடையிலான மோதல் மேடையிலேயே அம்பலமாகிவிட்டது.

இதைத்தொடர்ந்து, அன்புமணியை கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். தானே தலைவராகத் தொடர்வேன் என்றும் அறிவித்தார். பின்னர், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் பிரச்சனை ஓய்ந்ததாக தெரியவில்லை. இதற்கிடையே கடந்த வாரத்தில் பொது மேடையிலேயே அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தார்.
ஆனாலும், அவருடைய மன்னிப்புக்கு ராமதாஸ் தரப்பில் இருந்து எந்தவொரு ரியாக்ஷனும் வரவில்லை. இதையடுத்து, ராமதாஸ் வழக்கம்போல பாமக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சபாநாயகரைச் சந்திப்பதற்காக சிறிது நேரத்திற்கு முன்பு சென்னை தலைமை செயலகத்துக்கு சேலம் மேற்கு தொகுதியின் பாமக சட்டப் பேரவை உறுப்பினர் அருள் வந்திருந்த நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாமகவின் கெளவரத் தலைவர் ஜிகே மணிக்கும் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நாளை அக்கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications