பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வராது.. கிருஷ்ணகிரிக்கு வந்தது உள்ளூர் வெட்டுக்கிளிகள்.. வேளாண்துறை
சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வராது என்றும் கிருஷ்ணகிரியில் பார்த்தது உள்ளூர் வெட்டுக்கிளிகள் என்றும் தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில் நேற்று மாலை திடீரென ஏராளமான வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் அச்சத்தில் உறைந்துள்ள மக்கள், இப்போது வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளால் வேளாண் பயிர்கள் சேதமடைவது கண்டு பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உத்தரவின்பேரில், மேலசின்னப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான கே.வி.கே என்றழைக்கப்படும் பூச்சிகள் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் சுந்தர் ராஜன் தலைமையில், வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் மற்றும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மோகன்ராஜ் குழுவினர் வெட்டுக்கிளிகள் உள்ள பகுதிக்கு நேரில் சென்று இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி, கிருஷ்ணகிரி மட்டுமல்ல.. தென்கோடி, கன்னியாகுமரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்.. அதிர்ச்சி
பீதி
இந்த ஆய்வில் தற்பொழுது வந்துள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக் கிளிகள் இல்லை. கள்ளிச் செடிகளில் வந்து அமரும் வெட்டுக்கிளிகள். இது பருவநிலை மாற்றம் காரணமாக வந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் எந்தவித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சேதம்
இந்த நிலையில் கன்னியாகுமரியில் வேர்கிளம்பியை அடுத்த வெட்டுக்குழி பகுதியை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாழை மற்றும் ரப்பர் மரங்களை வெட்டுக்கிளிகள் தாக்கி சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
விவசாயிகள்
வெட்டுக்கிளிகளின் பிரச்சினை தலைத்தூக்கியுள்ளதால் இதுகுறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில் தமிழகத்திற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. கிருஷ்ணகிரியிலும் கன்னியாகுமரியிலும் விவசாயிகள் பார்த்தது உள்ளூர் வெட்டுக்கிளிகள்.
தீர்வுகள்
பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும். ஆனால் ராஜஸ்தானில்தான் இருக்கும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாலநி எல்லைகளை கண்காணித்து வருகிறோம். வெட்டுக்கிளி தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்தி மூன்று வகையான தீர்வுகள் தயார் நிலையில் உள்ளது.
விவசாயிகள்
மாலத்தியான், குளோர்பைரிபாஸ் ஆகிய மருந்துகளை கொண்டு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு அறிவித்த பிறகே இந்த மருந்துகள் தெளிக்கப்படும். வெட்டுக்கிளிகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு தேவையான மண் தமிழகத்தில் இல்லை. அதனால் அவை இங்கு வர வாய்ப்பில்லை. எனவே வெட்டுக்கிளிகள் விவகாரத்தில் விவசாயிகள் பயப்பட தேவையில்லை என்றார்.