கஜா புயலுக்கு இடையிலும் சாட்டிலைட் அனுப்பும் இஸ்ரோ.. ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் ஜிஎஸ்எல்வி!
கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது.
சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. மிக முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்ப இருக்கிறது.
சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த வாரம் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி தற்போது புயலாக மாறி உள்ளது. சென்னை மட்டுமில்லாமல் கடலூர், நாகையிலும், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட பகுதியிலும் அதிக அளவில் மழை பெய்யும்.
ரஃபேல் போர் விமான டீலிங்கில் நடந்தது என்ன? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு அறிக்கை
என்ன சாட்டிலைட்
இந்த நிலையில் இஸ்ரோ வரும் நவம்பர் 14ம் தேதி விண்ணில் செயற்கைக்கோளை ஏவ இருக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ விண்ணில் ஏவ இருக்கிறது. 7 மாதங்களுக்கும் பின் இப்போதுதான் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
புயல் வருகிறது
ஆனால் அதற்கு மறுநாள்தான் அதாவது 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் அடிக்க உள்ளது. இதனால் 14ம் தேதி காலையில் இருந்தே பெரிய அளவில் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 16ம் தேதி மாலை வரை இந்த புயலால் மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
பெரிய குழப்பம்
இதனால் ராக்கெட் விண்ணில் ஏவப்படுமா என்று சந்தேகம் வந்தது. ராக்கெட் ஏவுவதற்கு சரியான சூழ்நிலை நிலவுமா என்று கேள்விகள் எழுந்தது. முக்கியமாக ஸ்ரீஹரிகோட்டா அருகே அதிக அளவில் காற்று வீசும் என்று வானிலை மையமும் கூறியதால் இந்த சந்தேகம் வலுவடைந்தது.
கண்டிப்பாக நடக்கும்
இந்த நிலையில், திட்டமிட்டபடி இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி ஜிஎஸ்எல்வி மார்க் 3 வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும். 3,423 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மார்க்-3 எடுத்துச்செல்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.