பயமுறுத்தும் கஜா.. மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அரசு அறிவுறுத்தல்!
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
சென்னை: கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
வரும் 14ம் தேதி மாலையில் இருந்து 16ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க கடுமையான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் உள்ளது. 110 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் சென்னையை கடக்க வாய்ப்புள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கனமழையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான மீட்பு சாதனங்கள், பொருட்கள், மருந்து பொருட்களை தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.