கேம் ஓவர்.. விஜய் போட்ட சிங்கப்பெண் ஸ்கெட்ச் பின்னணி! இனி நேரா முதல்வர் ஆபீஸ் லிங்க்.. சைபர் டீம் அதிரடி
சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பிற்குப் புதியதொரு கவசமாக, சர்வதேச தரத்தில் உருவெடுத்துள்ள "சிங்கப்பெண்" சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார். பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் பாதுகாப்பு அரணுக்கும் இந்த படை எவ்வாறு வழிவகை செய்யப்போகிறது ? இதன் பின்னணியில் இருக்கும் அதிரடி திட்டங்கள் என்ன? என்பது குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக, ஏற்கனவே "காவலன் செயலி" மற்றும் "பிங்க் ரோந்து வாகனங்கள்" போன்றவை நடைமுறையில் உள்ளன. ஆனால் இந்த திட்டங்களையும் தாண்டி, முற்றிலும் மாறுபட்ட பாய்ச்சலுடன் சிங்கப்பெண் சிறப்பு படை களமிறக்கப்படுவது ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு படை நோக்கம்?
இந்த சிறப்பு அதிரடிப்படையின் முதன்மை நோக்கம், அவசர காலங்களில் சிக்கித் தவிக்கும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எந்தவிதத் தாமதமும் இல்லாமல், சம்பவ இடத்திற்கே விரைந்து சென்று உடனடி மீட்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவதாகும்.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை 'Zero Tolerance' எனப்படும் சற்றும் சகிப்புத்தன்மையற்ற முறையில் கையாள்வதையே இந்த படை தனது லட்சியமாகக் கொண்டுள்ளது.
பெண்கள் கல்லூரிகள், பள்ளிகள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், மற்றும் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கியப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு இந்த அதிரடிப் படையினர் ரகசியமாகவும் நேரடியாகவும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
100 அல்லது இதற்கென உருவாக்கப்படும் பிரத்யேக அவசர எண்களில் இருந்து வரும் புகார்கள் அனைத்தும் உடனடியாக இந்த தனிப்படைக்கு மாற்றப்பட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்படையின் ஸ்பெஷாலிட்டி
இந்த படையின் மிக முக்கியமான மற்றும் விவாதப் பொருளாக மாறியுள்ள சிறப்பம்சமே, இது சாதாரண காவல் நிலைய எல்லைகளுக்குள் முடங்கிவிடாமல் செயல்படப் போவதுதான்.
நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இப்படை இயங்கவுள்ளதால், சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளோ அல்லது நிர்வாகத் தாமதங்களோ இல்லாமல் அதிரடி நடவடிக்கைகள் சாத்தியமாகும் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் பொது வெளியில் மட்டுமின்றி, கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து சோஷியல் மீடியாவில் நடக்கும் ஆன்லைன் மிரட்டல்கள், மார்ஃபிங் மற்றும் சைபர் குற்றங்களை உடனுக்குடன் கண்டறிந்து முடக்க, பிரத்யேக சைபர் பிரிவும் இவர்களுடன் இணைந்து களமிறங்குகிறது.
இந்த பிரம்மாண்ட திட்டம் எப்படி செயல்படும்
சர்வதேச போலீஸ் தரத்திற்கு இணையாக முற்றிலும் புதிய மற்றும் நவீன வடிவமைப்புடன் கூடிய பிரத்யேக சீருடைகள் இப்படையினருக்கு வழங்கப்பட உள்ளன. நேவி ப்ளூ நிற அரைக்கைச் சட்டை, தோள்பட்டைகளில் இரண்டு வெள்ளி நட்சத்திரங்கள் மற்றும் காகி நிற நேர் தையல் கொண்ட நவீன பேண்ட் அணிந்து கம்பீரமாக இவர்கள் வலம் வரவுள்ளனர்.
முதற்கட்டமாக, இந்த சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு ஐஜி கே. பவானீஸ்வரி IPS அவர்களின் தலைமையில் பலமான உள்கட்டமைப்புடன் செயல்படவுள்ளது. இதில் ஒரு எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிற காவலர்கள் என 36-க்கும் மேற்பட்ட பிரத்யேகப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பாடி-வோர்ன் கேமராக்கள் மற்றும் நவீன வாகன வசதிகளுடன் இவர்கள் களமிறக்கப்படுகிறார்கள்.
இந்த சிங்கப்பெண் அதிரடிப்படைத் திட்டம் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமா அல்லது களத்தில் பெண்களின் பாதுகாப்பை நிஜமாகவே உறுதி செய்யுமா என்ற விவாதங்கள் அரசியல் மற்றும் சமூக தளங்களில் எழுந்துள்ள நிலையில், ஜூன் 9ம் தேதி முதல் அதாவது இன்று முதல் இதன் உண்மையான செயல்பாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.
தமிழகப் பெண்களிடையே பெரும் நம்பிக்கையையும், குற்றவாளிகளிடையே அச்சத்தையும் விதைத்துள்ள புதிய அரசின் இந்த அதிரடி முயற்சி, களத்தில் எந்த அளவிற்குப் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications