வாழும் காந்திகள்: 85 வயதிலும் சுறுசுறுப்பு.. 50 காசுக்கு இட்லி.. அசத்தும் காந்திமதி பாட்டி!
Recommended Video
சென்னை: மகாத்மா காந்தியை மறக்க முடியாது.. அவர் செய்த தியாகத்தை மறக்க முடியாது.. அவரது தன்னலமற்ற போராட்டத்தை மறக்க முடியாது.. அவரை நினைவு கூறும் அதே நாளில் நம்முடன் வாழும் காந்திகளையும் நாம் கெளரவிக்க வேண்டும்.
வாழ்க்கை மிக மிக சுருக்கமான ஒரு காலம். வாழும் காலத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன செய்தோம் என்பதுதான் நமது வரலாறாக மாறுகிறது. ஒவ்வொருவரும் ஏதாவது செய்யத்தான் துடிக்கிறார்கள். சிலருக்கு அதற்கான வாய்ப்புகள் எளிதாக அமையும், சிலருக்கு போராடிக் கிடைக்கிறது. சிலருக்கு கடைசி வரை கிடைக்காமலேயே போய் விடுகிறது.

திருச்சி காந்திமதியைப் பற்றி இங்கு பார்க்கப் போகிறோம். திருச்சி தாரநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார் காந்தி மதி. பாட்டிக்கு இப்போது 85 வயதாகிறது. அந்தக் காலத்துப் பாட்டி என்பதால் மனசு முழுவதும் ஈரம் மிக மிக அதிகம். பாசமும், அன்பும், கூடவே வாஞ்சையும் நிரம்பி புன்னகை தவழ இருக்கிறார் காந்திமதி பாட்டி.
தனது 83வது வயது வரை இட்லி வியாபாரம் செய்து வந்தவர் காந்திமதி. கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் இட்லி வியாபாரம் செய்தவர். விலை ஒன்றும் அதிகம் இல்லை. ஆரம்ப காலத்தில் ஒரு இட்லி 50 பைசாதான். பின்னர் பொருட்கள் விலை உயர்வால் 1 ரூபாயாக உயர்த்தினார். கடைசி வரை அதே விலைதானாம்.
மலிவான விலை என்றாலும் கூட இட்லியில் சுவை குறையாது. சூப்பராக இருக்கும். இவருக்கென்று தனி கஸ்டமர்கள் உண்டு. காசு இல்லாதவர்களிடம் காசு வாங்க மாட்டாராம். சாப்பிட்டுட்டுப் போப்பா என்று அன்புடன் அனுப்பி வைப்பாராம். எல்லோருக்கும் பிடித்த காந்திமதி பாட்டியை அனைவரும் அழைப்பது காந்தி ஆச்சி என்றுதான்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று தன்னாலான திருப்திகரமான ஒரு சின்ன சேவையை ஆற்றி தற்போது ஓய்வில் இருந்து வரும் காந்திமதி பாட்டியை வாழ்த்தி அவரது ஆசி பெற்று மகிழ்வோம்.












Click it and Unblock the Notifications