என்னாச்சு? முதல்வர் ஸ்டாலினை பாராட்டி.. திடீரென பல்டி அடித்த அர்ஜுன் சம்பத்.. பேட்டியில் ட்வீஸ்ட்!
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவில் பொதுவில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது கடமையைத்தான் செய்கிறார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். வெளியே சிலைகளை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம்
இந்த நிலையில் தடைக்கு இடையிலும் கோவை தேர் நிலைத்திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 5 அடி உயர விநாயகர் சிலை அங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டு இந்து மக்கள் கட்சியினர் சார்பாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி குறித்த பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நாங்கள் கொரோனா விதிகளை பின்பற்றித்தான் விழாவை கொண்டாடி வருகிறோம்.

விழா கொண்டாட்டம்
அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்றபடிதான் நான் விழாவை கொண்டாடி வருகிறோம். முதல்வர் ஸ்டாலின் தனது கடமையைத்தான் செய்கிறார். இந்த விஷயத்தில் முதலில் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அதன்பின் இதில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.

விளக்கம்
இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு தெளிவாகிவிட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கமாக தெளிவுபடுத்திவிட்டார். விநாயகர் சிலையை தடை செய்வது அரசின் நோக்கம் கிடையாது என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசு இதில் இன்னும் கொஞ்சம் தளர்வுகளை அறிவித்து இருக்கலாம். கோவில்களை திறக்க அனுமதி கொடுத்து இருக்கலாம். டாஸ்மாக்., தியேட்டர் எல்லாம் திறந்து இருக்கிறது. ஆனால் கோவில் மூடப்பட்டுள்ளது.

வருத்தம்
இப்படி கோவில்கள் நல்ல சுப தினத்தில் மூடப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. கொஞ்சம் தளர்வுகளோடு விதிகளை போட்டு இருந்தால் அதை பின்பற்றி நாங்கள் ஊர்வலம் நடத்தி இருப்போம். எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையில்லை. கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை மதிக்க நாங்கள் தயார். கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நாங்கள் ஊர்வலம் நடத்த தயார். தமிழ்நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். தளர்வுகள் வந்துவிட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டது. பள்ளி, கல்லூரிகள் திறந்து உள்ளனர். அப்படி இருக்கும் போது விநாயகர் சதுர்த்தி விழா மூலம் மட்டும் எப்படி கொரோனா பரவும், என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications