போலீசாரை கற்களை வீசி கொடூரமாக தாக்கிய கஞ்சா வியாபாரி! சென்னை கண்ணகி நகரில் பயங்கரம்
சென்னை: கண்ணகி நகர்ப் பகுதியில் கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீதே அந்த நபர் கற்களை வீசி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். கஞ்சா போதையில் நடக்கும் குற்றங்கள் மோசமானவை என்பதால் கஞ்சா விற்பனையைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இருப்பினும், அதையும் தாண்டி ஆங்காங்கே சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படி ஒரு ஷாக் சம்பவம் தான் கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசாருக்கே நடந்துள்ளது.
கஞ்சா வியாபாரி: சென்னை கண்ணகி நகர் பகுதியில் சுனாமி நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி உமாபதி. இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. குறிப்பாகக் கஞ்சா விற்பனை செய்த வழக்கிலும் கூட இந்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பாகச் சமீபத்தில் கைதான அவர் விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும், வெளியே வந்த உடனேயே அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை இரு நாட்களுக்கு முன்பு கத்தியால் வெட்டியுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பாக அந்த இரு நபர்கள் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தெரிந்து கொண்டு அவர்களைக் கஞ்சா வியாபாரி உமாபதி கத்தியால் வெட்டியுள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பு போலீசாரில் புகார் அளித்துள்ளனர்.
தாக்குதல்: இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார் உமாபதியை கைது செய்ய முயன்றனர். அப்போது அந்த ஆசாமி திடீரென போலீசாரையே தாக்கியுள்ளனர். கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசி தாக்கியுள்ளார். அப்போது அவரது நண்பனும் சேர்ந்து கொள்ளவே இருவரும் சேர்ந்து கற்களை வீசி போலீசாரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத போலீசார் சற்று திணறிப் போனார்கள்.
தப்பிய கஞ்சா வியாபாரி: போலீசாரை இரு குற்றவாளிகள் இணைந்து தாக்குவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவலர்களைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா வியாபாரி, அப்பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தார். பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவர்களைப் பிடிக்கப் பிடிக்க போலீசாரும் பொதுமக்களும் முயன்ற போதிலும் அவர்கள் தப்பிவிட்டனர்.
அந்த கஞ்சா வியாபாரியைப் பிடிக்க போலீசார் இப்போது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இரு காவலர்களைக் கஞ்சா வியாபாரி தனது நண்பருடன் சேர்ந்து தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications