"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, "சாப்பாடு கிடையாது.. வெரைட்டி ரைஸ் மட்டுமே வழங்கப்படும்" என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையின் பெரும்பாலான உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும், சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ டிரைவர்கள் பல மணி நேரம் காத்திருந்து, ஆட்டோக்களை இயக்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றனர். எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் அன்றாட வருமானத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள முன்னணி உணவகங்களில், பல்வேறு வகையான டிபன் மற்றும் அரிசி உணவு வகைகள் வழங்கப்படாது என ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி கிடையாது. சப்பாத்தி மற்றும் தோசை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கலவை சாதங்கள் வழங்கப்படும் வாரத்தில் இருமுறை அப்பளம் அல்லது முட்டை வழங்கப்படும் என விடுதி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடையை எப்போது வேண்டுமானாலும் மூடக்கூடிய நிலை உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது இருக்கக்கூடிய சிலிண்டரை வைத்து கடையை நடத்துவதாகவும் நாளை கடை திறக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் புலம்புகின்றனர்.
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதோடு சில ஹோட்டல்களில் விறகை வைத்து உணவை சமைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. பிரபல ஹோட்டல்கள் நேர குறைப்பு மற்றும் உணவு வகைகள் குறைக்கப்பட்டதை அறிவிப்பு பலகை வைத்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து வருகின்றன.
சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, "சாப்பாடு கிடையாது.. வெரைட்டி ரைஸ் மட்டுமே வழங்கப்படும்" என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையின் பெரும்பாலான உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளது, ஹோட்டல்களை அன்றாடம் உணவுக்காக நம்பி இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications