வாயை விட்ட சீமான்..வருண்குமார் நோட்டீஸ்! மரியாதை முக்கியம்.. ’ஆடு’ போல ஓடல.. சீனுக்குள் வந்த காயத்ரி
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு திருச்சி எஸ்பி வருண் குமார் அவதூறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் காவல்துறையினருக்கு மரியாதை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதிகாரம் மற்றும் பிற சலுகைகளை அனுபவிப்பதற்காக அவர்கள் தேசத்திற்கான தங்கள் சேவையை ஆடு போல பாதி வழியில் விட்டுவிடவில்லை என அதிமுக பிரமுகரான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுள்ளதாகக் கூறி அதைக் கண்டித்து நாம் தமிழர் சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளும் திமுக அரசு மீது பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கு திமுக அரசே காரணம் என்றும், கூட்டணி அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். மேலும் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்தும் சீமான் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த எஸ்பி வருண்குமார், தமிழ்நாட்டு மக்கள் இதுபோன்ற பேச்சுகளைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவரது பொய்யான கருத்துகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். ஜனநாயகம் மற்றும் நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பொது மேடையில் இதுபோன்ற கொச்சையான பொய்களைப் பேசினால் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் காவல்துறையினருக்கு மரியாதை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதிகாரம் மற்றும் பிற சலுகைகளை அனுபவிப்பதற்காக அவர்கள் தேசத்திற்கான தங்கள் சேவையை ஆடு போல பாதி வழியில் விட்டுவிடவில்லை என நடிகையும், அதிமுக பிரமுகரான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசக்கூடாது. அதனால்தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
சமீப காலங்களில் கொடூரமான கொலைகள் போன்ற சில ஆபத்தான சூழ்நிலைகளை காவல்துறை அதிகாரிகள் கையாளுவதை ஏற்கனவே நாம் பார்த்து வருகிறோம். பொது மக்கள் மற்றும் அரசியலமைப்பு நலன்களுக்காக நாம் அவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் வேலையில் அவர்கள் நல்லது அல்லது கெட்டது செய்தாலும் சரி, கோபம் தற்போதைய ஆளும் அரசாங்கத்தின் மீது இருக்க வேண்டும், காவல்துறை அதிகாரிகள் மீது அல்ல.
தற்போதைய மாநில அரசால் தான் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அவர்கள் கடுமையாகப் படித்து, பல போட்டிகளிலும் இந்த நிலையை அடைய கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிகாரம் மற்றும் பிற சலுகைகளை அனுபவிப்பதற்காக அவர்கள் தேசத்திற்கான தங்கள் சேவையை ஆடு போல பாதி வழியில் விட்டுவிடவில்லை. போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதையை உறுதி செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications