1 கோடி பேர் இருக்காங்க தமிழ்நாட்டுல.. தலையெழுத்தை தீர்மானிக்கும் ‘Gen Z ’ ஓட்டுகள்! அள்ளப் போவது யார்?
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் முக்கியமான சக்தியாக உருவெடுத்து வருகின்றனர். குறிப்பாக 'Gen Z ' என அழைக்கப்படும் இளைஞர்கள் இந்தத் தேர்தலில் பெரிய அளவில் பங்கேற்க உள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளதாக கூறப்படுவதால், அரசியல் கட்சிகள் பார்வை இந்த முறை அவர்களைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றன. அதனால், லேப்டாப், உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு வருகின்றன.
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்களே 'Gen Z ' தலைமுறையாக கருதப்படுகின்றனர். 90'ஸ் கிட்ஸ் தங்கள் பதின்ம வயதில் தான் இணையம், கைப்பேசி, சமூக ஊடகங்கள் போன்றவற்றை பார்த்திருப்பார்கள். ஆனால் இவர்கள் அப்படியல்ல.

சிறு வயதிலேயே அனைத்தும் கிடைத்திருக்கும். இவர்களுக்கு முந்தைய தலைமுறைகளைப் போல பாரம்பரிய அரசியல் பற்றுக் கொண்டவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பு, கல்வி, வளர்ச்சி போன்ற அம்சங்களை வைத்து முடிவெடுக்கும் தலைமுறையாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல்
இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள் இளைஞர்களின் முக்கிய தகவல் மூலமாக மாறியுள்ளதால், அரசியல் கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை இணைய தளங்களில் அதிகப்படுத்தி வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ச்சியான ஆட்சி, வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் சில இளம் வாக்காளர்களின் ஆதரவை பெறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜென்ஸீ வாக்காளர்கள்
அதேபோல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நலத் திட்டங்கள் மற்றும் கல்வி தொடர்பான வாக்குறுதிகள் மூலம் இளைஞர்களை அணுக முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கூறி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவனம் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயல்படும் கே. அண்ணாமலை சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக செயல்படுவதாலும், நேரடியாக கருத்துகளை வெளிப்படுத்துவதாலும் இளம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.
விஜய் இளைஞர் ஆதரவு
இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததன் தாக்கமும் இளைஞர்களிடம் புதிய அரசியல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவரது கட்சி மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைவர் சீமான் தமிழ் அடையாளம், இயற்கை பாதுகாப்பு, விவசாயம் போன்ற உணர்வு சார்ந்த கருத்துகளை முன்வைத்து இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் உள்ளனர்.
சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களில் இவர்களுக்கு ஆதரவு இருந்தாலும், அந்த ஆதரவை முழுமையாக வாக்குகளாக மாற்றுவது சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஜென்ஸீ வாக்காளர்கள் ஒரே கட்சிக்கு திரள்வது சாத்தியம் குறைவாகவே உள்ளது. பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதனால், இளைஞர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கு பிரியும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
2026 தேர்தல்
ஒருபுறம் ஆட்சியின் தொடர்ச்சியை விரும்பும் இளைஞர்கள் இருக்க, மற்றொரு புறம் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களும் உள்ளனர். மேலும் புதிய அரசியல் முயற்சிகளை ஆதரிக்கும் ஒரு பகுதியும் உருவாகியுள்ளது. எனவே, 2026 தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்லாமல், இளம் வாக்காளர்கள் எந்த திசையில் சாய்கிறார்கள் என்பதே ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள கட்சிகளின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications