தபால் ஆபீஸில் ₹1 லட்சம் போட்டால் 2 வருடத்தில் 7.5% வட்டியுடன் மொத்தம் ₹1,16,000 கைக்கு வரும்.
சென்னை: போஸ்ட் ஆபீஸ் திட்டம் மூலம் உங்கள் மனைவியின் பெயரில் பணத்தைச் சேமிக்க ஒரு அருமையான முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் 2 வருட காலத்திற்கு 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், வட்டியோடு சேர்த்து நல்ல லாபம் கைக்குக் கிடைக்கும். மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், எந்தவிதமான பயமும் இல்லாத பாதுகாப்பான சேமிப்பாக இது நடுத்தர மக்களால் பார்க்கப்படுகிறது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று யோசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சந்தையில் பல முதலீட்டு வாய்ப்புகள் இருந்தாலும், சிலவற்றில் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

போஸ்ட் ஆபீஸ் திட்டம்
ஆனால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சேமிப்புத் திட்டங்கள், பத்திரங்கள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் போன்றவற்றுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. காரணம், அரசு ஆதரவு பெற்ற குறைந்த அபாய முதலீட்டு திட்டம் என்பதால் இதில் போடும் பணத்திற்கு நல்ல பாதுகாப்பு இருப்பதோடு, உத்தரவாதமான வருமானமும் கிடைக்கிறது.
பொதுவாக நடுத்தர குடும்பத்தினர் முதலீடு என்று யோசித்தாலே முதலில் நினைவுக்கு வருவது வங்கிகளில் போடப்படும் பிக்சட் டெபாசிட் தான். பல வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு நல்ல வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக, பொது வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு சற்று கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இதனால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெயரில் முதலீடு செய்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
பிக்சட் டெபாசிட் திட்டம்
வங்கிகளுக்கு இணையாக, இன்னும் சொல்லப்போனால் வங்கிகளை விட பாதுகாப்பாகவும், கூடுதல் பலன்களுடனும் மத்திய அரசின் கீழ் இயங்கும் போஸ்ட் ஆபீஸ் பல திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் போஸ்ட் ஆபீஸ் நேர வைப்புத் திட்டம். இது வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டத்தை போன்றதே ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான கால அளவைத் தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது 1 வருடம், 2 வருடங்கள், 3 வருடங்கள் அல்லது 5 வருட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இதில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் 1,000 ரூபாய் இருந்தால் போதும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம், எந்தவிதமான வரம்பும் இல்லை.
இப்போது வழங்கப்படும் வட்டி விகிதங்களின்படி, 1 வருட டெபாசிட்டிற்கு 6.9 சதவீத வட்டியும், 2 வருட டெபாசிட்டிற்கு 7.0 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம் - மூத்த குடிமக்கள்
அதேபோல 3 வருட டெபாசிட்டிற்கு 7.1 சதவீத வட்டியும், 5 வருட டெபாசிட்டிற்கு அதிகபட்சமாக 7.5 சதவீத வட்டியும் கிடைக்கிறது. வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தனி வட்டி, மற்றவர்கள் அல்லது பெண்களுக்கு தனி வட்டி என்று இருக்கும். ஆனால், போஸ்ட் ஆபீஸ் நேர வைப்புத் திட்டத்தில் அனைவருக்கும் ஒரே சீரான வட்டி விகிதமே வழங்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் மனைவியின் பெயரில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
மனைவி பெயரில் டெபாசிட்
இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் உங்களது மனைவி பெயரில் 2 வருட காலத்திற்கு அதாவது 24 மாதங்கள் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள். காலாண்டு அடிப்படையில் கூட்டுவட்டியாக கணக்கிடப்பட்டு, 2 வருட காலத்திற்கு வட்டி விகிதம் 7.0 சதவீதம் என்பதால், இந்த காலக்கெடு முடியும் போது உங்களுக்கு வட்டியாக மட்டுமே தனியாக ரூ.14,888 கிடைக்கும்.
ஆக 2 ஆண்டுகள் கழித்து உங்கள் கைக்கு மொத்த முதிர்வுத் தொகையாக ரூ.1,14,888 முழுமையாகக் கிடைக்கும். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் எதற்கும் இந்த திட்டம் உட்படாது. இதனால் நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயம் இல்லாமல், நடுத்தர மக்கள் தங்களின் எதிர்காலத் தேவைக்காகவும், பெண்களின் சேமிப்பிற்காகவும் தாராளமாக இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
தபால் நிலைய சேமிப்பு - முக்கிய ஸ்பெஷாலிட்டி
இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இருக்கும் ஒரு கூடுதல் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அவசரத் தேவைக்கு இதிலிருந்து பணத்தை நடுவிலேயே எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
ஒருவேளை நீங்கள் 5 ஆண்டு கால திட்டத்தை தேர்வு செய்தால், உங்களுக்கு வருமான வரி சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு சலுகையும் கிடைக்கும். மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக பலர் கருதும் இந்த திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுச் செலவில் மிச்சம் பிடிக்கும் சிறு தொகையைக் கூட தைரியமாக சேர்த்து வைக்கலாம்.












Click it and Unblock the Notifications